தாய்லாந்தின் அரச குடும்ப மாளிகை தாய்லாந்தின் அரச குடும்ப மாளிகை  

விதையாகும் கதைகள் : புகழுக்காக செய்வது, தொண்டல்ல

கனவில் இறைவன் தோன்றி, பளிங்குக்கல்லில் பொறிக்கப்பட்டிருந்த மன்னரின் பெயரை அழித்துவிட்டு, வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயரை எழுதினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

முன்னொரு காலத்தில் வேங்கைபுரி என்ற நாட்டை ஆண்டு வந்த மன்னர், தனது நாட்டில் இறைவனுக்காக மிகப் பெரிய ஆலயம் ஒன்றை அமைக்க எண்ணினார். இதுவரை எவருமே கட்டியிராதவாறு மிக அழகிய கோயில் கட்டுவதன் வழியாக, தனது புகழ் பல்லாண்டு காலம் நிலைக்கும் என்பது அவருடைய எண்ணம். இதற்காக, நாடெங்கிலுமிருந்து, கைதேர்ந்த சிற்பிகளை வரவழைத்தார். பல மாதங்களுக்குப் பின்னர், கோயில் கட்டி முடிக்கப்பட்டது. அழகிய கோபுரமும், கோபுரத்தில் இருந்த சிற்பங்களும், பார்ப்பவர் உள்ளத்தைப் பரவசமடையச் செய்யும்படியாக விளங்கின. கோயில் பணி நிறைவுற்றதும், மிகப் பெரிய பளிங்குக்கல் ஒன்றில் கோயிலைக் கட்டிய தனது பெயரைப் பொன்னால் பொறிக்கச் சொல்லி, அதனைக் கோயிலின் முகப்பில் எல்லோர் கண்களிலும் படும்படியாகப் பதித்துவைத்தார்.

அன்றிரவு அரசர் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கனவு கண்டார். கனவில் இறைவன் தோன்றினார். இறைவன் பளிங்குக்கல்லின் அருகே சென்று, அதில் பொறிக்கப்பட்டிருந்த மன்னரின் பெயரை அழித்துவிட்டு வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயரை எழுதிவிட்டுச் சென்றார்.

மன்னர் திடுக்கிட்டு, கண் விழித்தார். நேரே கோயிலுக்குச் சென்று, சலவைக் கல்லைப் பார்த்தார். அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆம், அவர் பெயர் அழிக்கப்பட்டு யாரோ ஊர் பேர் தெரியாத ஒரு பெண்மணியின் பெயர் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட அரசருக்கு ஒருபுறம் அவமானமாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. காவலர்களை அனுப்பி அந்தச் சலவைக் கல்லில் பெயர் பொறித்துள்ள பெண்மணியை எங்கிருந்தாலும் தேடி அழைத்து வருமாறு கட்டளையிட்டார்.

காவலர்களும், நகர் முழுவதும் சுற்றித் திரிந்து, கடைசியில், ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு குடிசையில் தன்னந்தனியாக வசித்து வந்த ஒரு மூதாட்டியை அழைத்துவந்தனர். அவர் பெயர் தான் அந்தச் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த மூதாட்டியைப் பார்த்த அரசர்,  ”அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் உங்களுடையதுதானா?” என்று கேட்டார்.

மூதாட்டி, கண்களை நன்கு துடைத்துக்கொண்டு சலவைக்கல்லைப் பார்த்தார். பிறகு, ”ஆம் அரசே அது என்னுடைய பெயர் தான். தவறுதலாகப் பொறிக்கப்பட்டுள்ளதுபோல் இருக்கிறது!” என்றார்.

”இல்லை அம்மா, என் பெயர் தான் முதலில் அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டது. இறைவனே வந்து என் பெயரை அழித்துவிட்டுத் தங்கள் பெயரை இதில் பொறித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. தாயே, இந்தக் கோயில் பணியில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், இறைவன் தங்கள் பெயரை இதில் பொறித்திருக்கமாட்டார். தாங்கள் செய்த தொண்டு என்னவென்று கூறுங்கள்!”, என்றார் அரசர்.

நெடுநேரம் யோசனை செய்து பார்த்த மூதாட்டி, “”மன்னா! இந்தக் கோயில் பணிக்காக நான் ஒன்றும் செய்யவில்லை ஆனால், ஒன்று மட்டும் செய்திருக்கிறேன். இந்தக் கோயில் கட்டுவதற்கான கற்கள், மரங்கள் ஆகியவற்றை ஏற்றிவரும் வண்டிகள் நாள்தோறும் என் வீட்டுப் பக்கமாகத்தான் வரும். அந்த சமயத்தில் வண்டியோட்டிகளுக்குத் தாகந்தீரத் தண்ணீர் கொடுப்பேன்; மோர் கொடுப்பேன். குதிரைகளுக்குச் சிறிது புற்களை கொடுத்து, தண்ணீர் காட்டுவேன். அவ்வளவுதான் நான் செய்தது,” என்றார்.

”தாயே! நான் வெறும் புகழுக்காக இந்தக் கோயிலைக் கட்டினேன். தாங்களோ புகழை விரும்பாமல் தொண்டு செய்தீர்கள். எனவேதான், என் பெயரை அழித்துவிட்டு, இறைவன், தங்கள் பெயரைப் பொறித்துள்ளார். தன்னலமற்ற தங்கள் தொண்டினை இந்தக் கோயிலில் உள்ள சலவைக்கல் என்றென்றும் எடுத்துக்காட்டும். வாழ்க தங்கள் புகழ்!” என்று கூறிய மன்னர், அந்த மூதாட்டிக்கு நிறைய பரிசுகளைக் கொடுத்து அனுப்பினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2020, 10:59