வயது முதிர்ந்த பெண்மணியைச் சந்தித்துப் பேசும் இளைஞர் வயது முதிர்ந்த பெண்மணியைச் சந்தித்துப் பேசும் இளைஞர் 

விதையாகும் கதைகள் : நன்றியுடன் வாழ்வதே நலம்

"நான் பார்க்கமுடியாமல், கேட்கமுடியாமல் கிடந்தாலும், நீ என்னை தினமும் பார்க்கவருவாய் என்ற எண்ணமே எனக்குப் போதும். அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று அப்பெண்மணி அமைதியாகச் சொன்னார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

முதியோர் இல்லம் ஒன்றில், நோயுற்று படுத்திருந்த, வயதான பெண்மணி ரோசி அவர்களின் உடலில், ஒவ்வொரு பகுதியாக செயலிழந்து வந்தது. அவ்வில்லத்தில் பணியாற்றச்சென்ற ஓர் இளைஞர், ரோசி அவர்களிடம் காணப்பட்ட மகிழ்வைக்கண்டு ஆச்சரியமடைந்தார். நேரம் கிடைத்தபோதெல்லாம், அந்த இளைஞர், ரோசி அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

நாளடைவில், ரோசி அவர்களால், தன் கைகளையும், கால்களையும் அசைக்கமுடியாமல் போனது. "என் கழுத்தை அசைக்கமுடிகிறதே, அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று அவர் கூறிவந்தார். ஒருவாரம் சென்று, ரோசியால் தன் கழுத்தையும் அசைக்கமுடியவில்லை. "என்னால் பார்க்கவும், கேட்கவும் முடிகிறதே,  அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று ரோஸி புன்சிரிப்புடன் கூறியது, இளையவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

"உங்களால் பார்க்கவும், கேட்கவும் முடியாமல் போனால் என்ன செய்வீர்கள்?" என்று அந்த இளைஞர் ரோஸியிடம் கேட்டார். அதற்கு அவர், "நான் பார்க்கமுடியாமல், கேட்கமுடியாமல் கிடந்தாலும், நீ என்னை தினமும் பார்க்கவருவாய் என்ற எண்ணமே எனக்குப் போதும். அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று அமைதியாகச் சொன்னார்.

இல்லாததை எண்ணி, ஏக்கத்தில் வாழ்வதைவிட, உள்ளதை எண்ணி, நன்றியுடன் வாழ்வது மேல்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2020, 12:32