பயிற்சி பெறும் நாய்கள் பயிற்சி பெறும் நாய்கள் 

விதையாகும் கதைகள் : நேர்மைக்கு என்ன பலன்?

பத்து நாட்களே உணவூட்டிய நாய் ஒன்று வால் ஆட்டிக்கொண்டே பின்னே வரும்போது, 30 ஆண்டுகள் பழகிய ஒருவர் திடீரென மாறிப்போவது எப்படி என்பதுதான் புரியவில்லை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

ஒரு சுல்தானிடம் ஓர் அமைச்சர் முப்பது ஆண்டு காலமாகப் பணிபுரிந்து வந்தார். நேர்மைக்கும் உண்மைக்கும் விசுவாசத்திற்கும் சான்றாகத் திகழ்ந்தவர். அவருடைய நேர்மையே சக அமைச்சர்களிடம் அவர் மீது பொறாமையை உருவாக்கியது. அவர் மீது நம்பிக்கை அதிகம் வைத்திருந்த சுல்தானிடம் அடிக்கடி அவரைப் பற்றிப் புகார்கள் கூறிய வண்ணம் இருந்தனர். இறுதியாக மன்னர் மனம் மாறி அமைச்சரை கொன்று விட முடிவு செய்தார். தீர்ப்பும் வழங்கப்பட்டது.

அந்த நாட்டில் மரண தண்டனை பெற்றவர்களை ஒரு மைதானத்தில் விட்டு இருபது வேட்டை நாய்களை அவிழ்த்து விட்டு விடுவர். நாய்களிடம் கடிபட்டு அவர்கள் அகோர மரணம் அடைவர்.

அமைச்சர் தன் வீட்டுப் பிரச்சினைகளை முடிக்கப் பத்து நாட்கள் அவகாசம் தருமாறு வேண்டிக்கொண்டார். தான் எங்கும் தப்பி ஓடமாட்டேன் என்ற உறுதிமொழியை வாங்கிக் கொண்டு அனுமதித்தார் சுல்தான்.

நேரே வீட்டிற்குச் சென்ற அமைச்சர் நூறு தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு அந்த இருபது வேட்டை நாய்களை வளர்க்கும் பொறுப்பு உள்ளவரைப் பார்த்து அவரிடம் கொடுத்து விட்டு அந்த நாய்களைப் பத்து நாட்கள் தானே பார்த்துக்கொள்ள அனுமதி வேண்டினார். அவரும் மகிழ்வுடன் ஒத்துக் கொண்டார்.

பத்து நாட்களில் அமைச்சர் அந்த நாய்களை மிக நல்லபடியாக அன்புடன் கவனித்துக் கொண்டார். வெறியோடு முதலில் பாய்ந்த நாய்கள் பத்தாம் நாள் அவர் கையாலேயே உணவு சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டன.

பதினோராம் நாள் அமைச்சர் மன்னனிடம் சென்று மரண தண்டனையை நிறைவேற்றலாம் என்று கூறினார். அரசன் ஆணையிட அமைச்சரும் அந்த மைதானத்தில் தள்ளப்பட்டு நாய்களும் அவிழ்த்து விடப்பட்டன. பாய்ந்து வந்த நாய்கள் அவரைக் கண்டவுடன் அவரைச் சுற்றி அமைதியாக வாலை ஆட்டின.

சுல்தானுக்கு ஆச்சரியம். 'இது எப்படி இயலும்?', என்று அமைச்சரைக் கேட்டார். அவரும் நடந்ததைக் கூறி விட்டு, “இந்த விலங்குகளை நான் பத்து நாட்கள்தான் பார்த்துக் கொண்டேன். அதன் பலன் என்ன என்பதை சுல்தான் நேரிலேயே பார்த்தீர்கள். முப்பது ஆண்டு காலம் உங்களுக்கு நேர்மையாய் சேவை புரிந்ததற்கு என்ன பலன் என்பது இனிமேல்தான் தெரியும்”என்றார். அரசன் வெட்கித் தலை குனிந்தார்.

மன்னர் அமைச்சரை மன்னித்ததுடன், அவரைப் பற்றி குறை சொன்னவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று அவரிடமே ஒப்படைத்தார்.

அமைச்சரோ அவர்களையும் மன்னித்து அவர்களிடமும் அன்பு பாராட்டி வந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 November 2020, 10:57