தன்னம்பிக்கை தன்னம்பிக்கை 

விதையாகும் கதைகள்: தன்னம்பிக்கையின் பலன்

உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால், கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை - சுவாமி விவேகானந்தர்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஓர் ஊரில், ஏழை ஒருவர் சிறிய அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கிடைத்த ஊதியத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஒருநாள் அவர் நடந்துபோய்க்கொண்டிருந்தபோது, ஒரு பழைய நாணயத்தைப் பார்த்து, அதை எடுத்து தூசி தட்டினார். அந்த நாணயத்தில் நடுவில் துளை இருந்தது. அந்தக் காலத்தில் துளை இருந்த நாணயம் கிடைத்தால், அது நல்லது, இராசி என்ற நம்பிக்கை உண்டு. அந்த மனிதருக்கும் அது கிடைத்ததில் அதிக ஆனந்தம். இனிமேல் எனது கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடும் என்று மகிழ்ந்து, அந்த நாணயத்தை பத்திரமாக தனது மேல் சட்டைப்பைக்குள் போட்டு வைத்தார். அதை ஒருநாளும் வெளியே எடுக்கமாட்டார். ஆனால் அதை அடிக்கடி தொட்டு மட்டும் பார்த்துக்கொள்வார். சிறிது காலம் சென்று, நல்வாய்ப்புகள், உண்மையாகவே அவரை தேடிவரத் தொடங்கின. செல்வம், பணம், புகழ், பதவி போன்ற எல்லாம் வந்து சேர்ந்தன. சமுதாயத்தில் அவர் பெரிய மனிதரானார், எல்லாரும் அவரைப் பாராட்டினார்கள். அவர் எதைத் தொட்டாலும் வெற்றிதான், எல்லாம் அந்த நாணயத்தின் மகிமை என்று மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும் அந்த மேல்சட்டையைப் போட்டுக்கொண்டுதான் வெளியில் கிளம்புவார். வெளியே புறப்படுவதற்குமுன், சட்டைப் பையில் அந்த நாணயம் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக்கொள்வார். இப்படி பல ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் அந்த துளையுள்ள நாணயத்தை கண்ணால் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்தது. அன்று காலையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தன் மனைவியிடம் தனது ஆசையைச் சொன்னார். ஆனால் மனைவியோ, இப்ப எதுக்கு அதைப் பார்க்கணும், வேண்டாமே என்று இழுத்தார். இல்லை இன்று பார்த்தே தீருவேன் என, அதை சட்டைப் பையிலிருந்து வெளியே எடுத்துப் பார்த்தார். அந்த நாணயத்தில் துளையே இல்லை. அப்போது அவரது மனைவி அவரிடம், உங்க சட்டை தூசியா இருக்கேன்னு, நான் அதை உதறினேன். அப்போ அந்த நாணயம் சன்னல் வழியாக தெருவில் விழுந்துவிட்டது. நானும் எவ்வளவோ நேரம் தேடினேன். கிடைக்கவில்லை. யாரோ அதற்குள் எடுத்துவிட்டார்கள்போலும். உங்களுக்குத் தெரிந்தால் வருத்தப்படுவீர்களே என்று நினைத்து, உங்களது சட்டைப் பைக்குள் ஒரு காசை போட்டுவைத்தேன் என்றார். சரி இது நடந்தது எப்போது என கணவர் கேட்க, நீங்க அந்தக் காசை எடுத்த மறுநாளே நடந்தது என்று மனைவி சொன்னார். ஆம். அந்த மனிதருக்கு நல்வாய்ப்பைக் கொடுத்தது அந்த நாணயமில்லை, அவரது நம்பிக்கை. அதாவது தன்னம்பிக்கை. அதுதான் அவரில் வேலை செய்துள்ளது. எனவே வாழ்வில் முன்னேற விரும்புகிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். (நன்றி தென்கச்சி சுவாமிநாதன்)

“உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை (சுவாமி விவேகானந்தர்)”

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2020, 14:21