தேடுதல்

West Bank பகுதியில் மசூதிகள் மூடப்பட்டுள்ளதால், வீட்டு மாடியில் மகன்களுடன் தொழுகை நடத்தும் குடும்பம் West Bank பகுதியில் மசூதிகள் மூடப்பட்டுள்ளதால், வீட்டு மாடியில் மகன்களுடன் தொழுகை நடத்தும் குடும்பம் 

விதையாகும் கதைகள் : தீயவைகளிலிருந்து பிறக்கும் நல்லவை

ஒரே தந்தைக்குப் பிறந்து, ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இரு குழந்தைகளில் ஒன்று ஊர்போற்றும் நல்லவனாகவும், மற்றொன்று ஊர் தூற்றும் கொடியவனாகவும் இருக்கக் காரணம் என்ன?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவர் போதைப் பழக்கமுள்ளவர் – எப்போதும் குடும்பத்தில் இருப்பவர்களை நையப்புடைத்து, மிரட்டி, பணம் வாங்கிக் குடித்துக்கொண்டே இருப்பார். பிறருக்குத் தொல்லை கொடுத்து இன்பம் பெறும் மனப்போக்குடையவர் அவர்.
மற்றவரோ, நல்லவராக, சமுதாயத்தில் மதிக்கப்படுபவராக, நல்ல குடும்பத்தலைவராக இருந்தார். அருமையாக குடும்பத்தைப் பராமரித்து வந்தார்.
"ஒரே தந்தைக்குப் பிறந்து, ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இரு குழந்தைகளில் ஒன்று ஊர்போற்றும் நல்லவனாகவும், மற்றொன்று ஊர் தூற்றும் கொடியவனாகவும் இருக்கக் காரணம் என்ன", என ஊரில் இருந்தவர்கள் தங்களுக்கிடையே கேட்டுக்கொண்டனர்.
அந்த ஊர் பெரியவர் ஒருவர், குடிகார மகனையும், நல்ல குடும்பத் தலைவராக இருப்பவரையும் நோக்கி இப்படிக் கேட்டார், "உன் நடத்தைக்கு யாரப்பா காரணம்?".
அதற்கு இருவரும் ஒரே பதில்தான் சொன்னார்கள், "என்னுடைய நடத்தைக்குக் காரணம் என்னுடைய அப்பாதான்".
"உன் அப்பா என்ன செய்தார்", என்று குடிகாரனைக் கேட்டபோது அவர் இவ்வாறு சொன்னார். என் தந்தை எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பகலிலும், இரவுகளிலும் குடித்துக் கொண்டே இருப்பார். குடும்பத்தினரைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பார். அடிகளுக்குப் பஞ்சமில்லை. அவரின் மகனாகிய நான் வேறு எப்படி இருப்பேன். அதனாலே நானும் குடிகாரனாகிவிட்டேன். மோசமான தந்தையின் மகனான நான் மோசமாகிவிட்டேன். என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம்", என்று கூறினார், குடிகார மகன்.
"உன் அப்பா என்ன செய்தார்", என்று நல்லவரைப் பார்த்துக் கேட்டபோது, "என் தந்தை எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பகலிலும், இரவுகளிலும் குடித்துக் கொண்டே இருப்பார். குடும்பத்தினரைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பார். அடிகளுக்குப் பஞ்சமில்லை. அதனாலே நான் குடிக்கக் கூடாது, குடிகாரனாகிவிடக் கூடாது. மோசமான தந்தையின் மகனான நான் மோசக்காரனாக இராமல், என்னுடைய பிள்ளைகளுக்கு நல்லவனாக இருக்க எண்ணினேன். என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம்" என்று கூறினார்.
ஆம், எந்த ஒருவரின் நடத்தையிலும் நேர்மறை நிகழ்வுகளும் உண்டு, எதிர்மறை நிகழ்வுகளும் உண்டு. அன்னப்பறவை போல, நாமும் நேர்மறையான கருத்துக்களையே பாடமாக எடுத்துக்கொள்வோமா.
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 July 2020, 14:51