பூங்காவில் விளையாடும் குழந்தைகள் பூங்காவில் விளையாடும் குழந்தைகள் 

விதையாகும் கதைகள் : உலகம் அன்பினால் கட்டமைக்கப்பட

'பணம்தான் உயர்ந்தது' என்ற எண்ணப்போக்கை மாற்றி, தன்னம்பிக்கையை விதைத்து, 'இந்த உலகம் நல்லவர்களால் ஆனது!' என்ற நல்ல எண்ணத்தை வளரவிடுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்துக்கொண்டு கடைத் தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.

ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளைப் பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான்.

அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்துவிட்டு, ஒரு பெரிய மனிதரின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து... ''அந்த பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான்.

அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி, ''உன்னிடம் எவ்வளவு உள்ளது?'' என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், தான் விளையாட சேர்த்துவைத்திருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்!

''இது போதுமா?" என்று கவலையுடன் கேட்டான்.

அதற்கு அந்தக் கடைக்காரர், அவனின் கவலையான முகத்தை பார்த்துக்கொண்டே, "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!'' என்று மீதியை கொடுத்தார். சிறுவன், மகிழ்ச்சியோடும், மீதி உள்ள சிப்பிகளோடும்.... தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான்.

இதை எல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த அந்தக் கடையின் வேலையாள், முதலாளியிடம், "ஐயா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையைக் கொடுத்துவிட்டீர்களே" என்றார்.

அதற்கு அந்த முதலாளி, ''அந்த சிறுவனுக்கு, 'பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும்' என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் 'பணம்தான் உயர்ந்தது' என்ற மாற்றம் வந்துவிடும்... அதை தடுத்துவிட்டேன். மேலும், 'தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கித் தர முடியும்' என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன்.

என்றோ ஒரு நாள், அவன் பெரியவன் ஆகி இந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கையில், 'இந்த உலகம் நல்லவர்களால் ஆனது!' என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும். ஆகையால், அவன் எல்லாரிடமும் அன்புகாட்டத் தொடங்குவான். உலகம் அன்பினால் கட்டமைக்கப்படவேண்டும்'' என்றார்!

"அன்பு" என்ற ஒரு வார்த்தையில்தான், இன்னும் இந்த உலகமும் உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2020, 16:49