கொரோனா தொற்றுநோய் பரிசோதனை கொரோனா தொற்றுநோய் பரிசோதனை  

கோவிட்-19 தடுப்பு ஊசிகள் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க

கொரோனா தொற்றுநோயால் உருவாகியுள்ள மனநலப் பிரச்சனைகள் களையப்படுவதற்கு, அரசுகளும், பொதுமக்கள் சமுதாயமும், நலவாழ்வு அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஐ.நா. அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 நோய்க்குத் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டபின், இந்த வசதி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டுமென்று, UNAIDS எனப்படும் ஐ.நா. எய்ட்ஸ்நோய் கட்டுப்பாட்டு அமைப்பு, மே 14, இவ்வியாழனன்று நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

140க்கும் அதிகமான உலகத் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களின் கையெழுத்துடன் உலகின் அரசுகளுக்கென வெளியிடப்பட்டுள்ள திறந்த மடலில், கோவிட்-19 நோயைக் குணமாக்குவதற்கென கண்டுபிடிக்கப்படும் ஊசி மருந்துகள், சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் அனைத்தும், காப்புரிமை ஏதுமின்றி எல்லாருக்கும் இலவசமாக கிடைப்பதற்கு வழியமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நோய் குறித்த அறிவியல் ஆய்வுகள், நாடுகளுக்கிடையே பகிரப்பட வேண்டும் மற்றும், ஊசி மருந்துக்கு காப்புரிமை விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று, தென்னாப்ரிக்க அரசுத்தலைவர் Cyril Ramaphosa அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கொரோனா தொற்றுநோயால் உருவாகியுள்ள மனநலப் பிரச்சனைகள் களையப்படுவதற்கு, அரசுகளும், பொதுமக்கள் சமுதாயமும், நலவாழ்வு அதிகாரிகளும் உடனடியாக அக்கறை காட்டுமாறு, ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். 

உலகில் மனத்தளர்ச்சியால் 26 கோடியே 40 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் ஏறத்தாழ பாதிப்பேரின் மனநலம் 14 வயதிலிருந்தே பாதிப்புக்கு உள்ளாகிறது, இதனால் 15க்கும், 29 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் மத்தியில் இடம்பெறும் இறப்புக்கு இரண்டாவது காரணம் தற்கொலை என்று ஐ.நா. கூறியுள்ளது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2020, 16:00