மலைமீது ஏறும் பயிற்சி மலைமீது ஏறும் பயிற்சி 

விதையாகும் கதைகள் : சேமித்ததை வீணடித்தல் முறையா?

கடினமாக உழைத்துச் சேர்த்ததை, ஒரு நொடியில் வீணடிக்க சொல்லும்போது, யாருக்குத்தான் கோபம் வராது?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஓர் ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருடைய ஒரே மகன், ஊதாரித்தனமாக தந்தை சேர்த்த செல்வத்தையெல்லாம் செலவழித்து வந்தார். கவலை அடைந்த செல்வந்தர், அந்த ஊருக்கு வந்த துறவியிடம், தமது கவலையைக் கூறினார். அதற்கு அத்துறவி, “உங்கள் மகனை இங்கு அனுப்பி வையுங்கள்” என்று கூறினார். செல்வந்தர், தம் மகனிடம், “நமது ஊருக்கு வந்திருக்கும் துறவி மிகவும் சக்தி வாய்ந்தவர். அவரைப் பார்த்து ஆசி வாங்கி வா” என்று அனுப்பி வைத்தார். மகனும் வேண்டா வெறுப்பாக சரி என்று ஒப்புக்கொண்டு துறவியைப் பார்க்கச் சென்றார். துறவியைச் சந்தித்து, தம் தந்தை, அவரைக் காண தன்னை அனுப்பினார் என்று கூறினார். துறவியும், “நல்லது. என் பின்னால் அந்த மலைக்கு வா” என்று கூற, மகனும் துறவியைப் பின்தொடர்ந்து, மலை மீது ஏறத் தயாரானார். அப்போது துறவி, ஒரு சிறிய பாறாங்கல்லை சுமந்து வருமாறு இளைஞரிடம் கூறினார். செல்வந்தரின் மகனும் சரி என்று, அக்கல்லைத் தூக்கிக்கொண்டு, சிரமப்பட்டு, மலை மீது ஏறினார். மேலே வந்தவுடன், அந்தக் கல்லை, மலையுச்சியிலிருந்து உருட்டிவிடும்படி துறவி கூறியதும், மகனுக்குக் கோபம் வந்தது. “என்ன விளையாடுகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு துறவியோ, “இல்லை மகனே. எதனால் உனக்கு இந்த கோபம் வந்தது?” என்று கேட்டார். “எவ்வளவோ கஷ்டப்பட்டு கொண்டு வந்த என் உழைப்பை, ஒரு நொடியில் வீணடிக்கச் சொல்கிறீர்கள், பிறகு கோபம் வராதா?” என்று கேட்டார் அவர். அதற்கு துறவி, “உன் தந்தை மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்த செல்வமும், அவருக்கு இருக்கும் நன்மதிப்பும், இப்படித்தான் கஷ்டப்பட்டு சேர்த்தது. ஆனால், நீ அதையெல்லாம் பாழ் செய்வது, எந்த விதத்தில் நியாயம்?” என்று கேட்டவுடன், செல்வந்தரின் மகன், வெட்கித் தலைகுனிந்து, துறவியிடம் நன்றி சொல்லிவிட்டு, தன் தந்தையிடம் சென்று மன்னிப்பு கேட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2020, 11:15