மல்யுத்த மேடையில் மல்யுத்த மேடையில்  

விதையாகும் கதைகள் : அவமரியாதை எனும் பரிசு!

ஒருவர் வழங்கும் பரிசை வாங்க மறுக்கும்போது, அது, கொடுத்தவருக்கு சொந்தமாகிவிடுகிறது. அதுபோலவே, அவரின் தூற்றல்களும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

பல போர்க்களம் பார்த்த வயதான, பெரும் வீரர் ஒருவர், போர்ப்பணியிலிருந்து ஒதுங்கி, கிராமத்தில் தங்கி, இளைஞர்கள் பலருக்கு பயிற்சி தந்து கொண்டிருந்தார். வயது முதிர்ந்தாலும், எந்த எதிராளியையும் தோற்கடித்துவிடும் உடல் வலிமையும், மன பலமும் அவருக்கு இருந்தன.

ஓர் இளம் வீரன், அந்த கிராமத்துக்கு வந்தான். இந்த முதிர்ந்த போர் வீரரை வீழ்த்தி, முதன்மை வீரன் என, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளத் துடித்தான்.

அவனுக்கு, உடல் வலிமை மட்டுமல்ல, எதிராளிகளின் பலவீனத்தைக் கண்டுபிடித்து, அவர்களை வீழ்த்தும் அசாத்தியத் திறமையும் இருந்தது. தன் பேச்சால், எதிராளியை தூண்டிவிட்டு, முதல் தாக்குதலுக்காகக் காத்திருப்பான். அதில், எதிராளியின் பலவீனம் அறிந்து, பலமாகத் தாக்கி, எடுத்த எடுப்பில் வீழ்த்துவதுதான், அவன் பின்பற்றிய சண்டை யுத்தி. இப்படி அவனால் வீழ்த்தப்பட்ட வீரர்கள் பலர்.

கிராமத்தில், வயதான வீரரின் பயிற்சிக் கூடத்துக்கு வந்த வீரன், அவருடன் தான் போட்டியிட விரும்புவதாகச் சொன்னான். இதைக்கேட்ட முதிய வீரரின் மாணவர்கள், கடுமையாக எதிர்த்தனர்.

அவனுடன் போட்டியிடுவதை, வயதான வீரரும் விரும்பவில்லை. ஆனால், வந்திருந்த வீரனுக்கும், தன் மாணவர்களுக்கும் ஒரு பாடம் கற்றுத்தர விரும்பினார். இளம் வீரனின் சவாலை ஏற்பதாக அறிவித்தார்.

நகரின் நாற்சந்தியில் மோதல் களம். களத்துக்கு வந்ததும், இளம் வீரன் முதியவரின் கோபத்தைத் தூண்டிவிட, மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டினான். அவரது முகத்தில் காறி உமிழ்ந்தான். சிறு கற்களை வீசினான். மண்ணை வாரி இறைத்தான்.

அவரை அவமானப்படுத்தி, கோபப்படுத்தி, தன் தாக்குதலைத் துவங்கலாமென்பது அவன் நோக்கம். ஆனால் வயதான வீரரோ, அசைவற்று அமைதியாக நின்றிருந்தார். கடைசியில் களைத்துப்போய், தோற்றுவிட்ட மனதுடன், அந்த இளைஞன் களத்திலிருந்து வெளியேறினான்.

இளைஞர்கள் அனைவரும் தங்கள் குருவைச் சூழ்ந்துகொண்டனர்.  “என்ன இது… எப்படி இந்த அவமானத்தைப் பொறுத்துக்கொண்டீர்கள்? நீங்கள் தோற்றிருந்தாலும்கூட பரவாயில்லை, பதிலுக்கு உங்கள் வாளை உருவி அவனுடன் மோதியிருக்கலாமே, இப்படி அமைதியாக இருந்து எங்களை அவமானப்படுத்திவிட்டீர்களே குருவே?,” என்றனர்.

குரு, அதே அமைதியுடன், அவர்களை ஏற இறங்கப் பார்த்து, ஒரு கேள்வி கேட்டார்: “யாராவது உங்களுக்கு பரிசு கொடுக்க விரும்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களில், உங்கள் எதிரிகளும் இருக்கலாம். அந்தப் பரிசு மோசமானதாகவும் இருக்கலாம். அந்தப் பரிசை நீங்கள் பெற மறுத்துவிட்டால், அது யாருக்குச் சொந்தம்?”

 

பாடம் படித்துக்கொண்டனர் மாணவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2020, 13:24