இதுவும் கடந்துபோகும் இதுவும் கடந்துபோகும் 

விதையாகும் கதைகள்: வெற்றியின் தாரக மந்திரம்

இதுவும் கடந்துபோகும். இவ்வுலகில் நிலையானது என்று எதுவுமே இல்லை. ஒவ்வொரு கவலையும் துன்பமும், வாழ்வில் பாடத்தைக் கற்றுத்தரவே வருகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான்

மன்னன் ஒருவர் தன் அரசவை அறிஞர்களிடம், “நான் எனக்காக ஒரு மோதிரம் செய்யப் போகிறேன். இக்கட்டான கட்டத்தில் படித்தால், எனக்கு உதவக்கூடிய ஒரு சுருக்கமான செய்தியை அதில் வைத்திருக்க விரும்புகிறேன். அப்படி ஒரு செய்தி வேண்டும்” என்று கேட்டார். பல நாள்கள் முயன்றும், மன்னரின் விருப்பத்தை அரசவை அறிஞர்களால் நிறைவேற்ற முடியவில்லை. மன்னரிடம் ஒரு வயதான பணியாள் இருந்தார். மன்னர் அவரை ஒரு பணியாளாகவே கருதுவதில்லை. வயதின் நிமித்தம் அவரிடம் மிகவும் மரியாதை வைத்திருந்தார். இந்த விடயத்தில் அந்த வயதானவர் மன்னருக்கு உதவ முன்வந்தார். அவருக்கு துறவி ஒருவர் கொடுத்த, இக்கட்டான கட்டத்தில் படித்தால் உதவக்கூடிய செய்தியை மன்னருக்குக் கொடுத்தார். கொடுக்கும்போது “இதைப் படிக்க வேண்டாம். மோதிரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாமே முடிந்துவிட்டது, வேறு வழியே இல்லை எனும் சமயத்தில் இதைத் திறந்து பாருங்கள்” என்றார். ஒரு சமயம், அந்த மன்னருக்கு எதிராக நடந்த போரில், நாட்டை இழந்து, தனது குதிரையில் தப்பித்து ஓடினார். பின்னால் எதிரிப் படையினர் துரத்தி வந்து கொண்டிருந்தனர். அப்போது பாதையும் முடிவுற்றது. வேறு வழியற்று ஒரு மலை முகடுக்கு வந்தார் மன்னர். கீழே பெரும் பள்ளத்தாக்கு, மறுபக்கம் எதிரிகள். மன்னருக்கு அப்போது மோதிரத்தின் நினைவு வந்தது. அவர் மோதிரத்தில் வைக்கப்பட்டிருந்த செய்தியை எடுத்தார், அதில் “இதுவும் கடந்து போகும்” என்ற செய்தி இருந்தது. எதிரிப் படையினர் கடந்து சென்றுவிட்டனர். மன்னரும் இக்கட்டான கட்டத்தில் இருந்து மீண்டார். பின்பு, அந்த மன்னர், தன்னுடைய படைகளைத் திரட்டிக்கொண்டு, திரும்பவும் போராடி வெற்றி பெற்றார். மன்னர் தலைநகரத்தில் வெற்றியோடு நுழையும்போது, கோலாகலமான வரவேற்புக் கொடுக்கப்பட்டது. மன்னர் தன்னைப் பற்றிப் பெருமையாக உணர்ந்தார். அப்போது மன்னரோடிருந்த அந்த வயதான வேலையாள், “அரசே, அந்த வாசகத்தை திரும்பவும் பாருங்கள் என்றார். வெற்றிக் களிப்பில் இருந்த மன்னரோ, வேண்டா வெறுப்புடன் அந்த முதியவரை நோக்கினார். “அரசே, அந்தச் செய்தி, நீங்கள் இக்கட்டான நிலையில் இருக்கும்போது மட்டுமல்ல, வெற்றியாளராக இருக்கும் நிலையில்கூட அது தேவைதான்” என்று கூறினார். மன்னர் தன் மோதிரத்தில் இருந்த, “இதுவும் கடந்து போகும்” என்ற செய்தியை மீண்டும் படித்தார். மகிழ்ச்சியான, வெற்றியான நிலையிலும்கூட அமைதி அவரை ஆட்கொண்டது. வெற்றியும் தோல்வியும், இன்பமும் துன்பமும், எல்லாமே கடந்து போகும். (இணையதளம் அறிவுக்களஞ்சியம்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 March 2020, 12:07