தேடுதல்

கியூபா El Rincón திருத்தலத்தில் பக்தர்கள் கியூபா El Rincón திருத்தலத்தில் பக்தர்கள்  

விதையாகும் கதைகள்: என்ன தேவை என்பதை சொல்வதல்ல பக்தி

ஒரு தத்துவஞானி தினமும் கடைவீதி செல்வார். ஒவ்வொரு கடையிலும் சிறிது நேரம் நின்று எல்லாவற்றையும் பார்த்துவிட்டு எதையும் வாங்காமல் வெறுமனே திரும்பி வந்து விடுவார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இளைஞன் ஒருவன் அதிகாலை எழுந்து ஆற்றில் குளித்து அருகில் உள்ள கோவிலுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தான். கோவிலில் இறைவன் முன்பு ஏதாவது கோரிக்கைகள் சொல்லியே வழிபடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். பலநாட்கள் இதைப் பார்த்த ஒரு பெரியவர், அவனை அழைத்து அவனிடம் ஒரு கதை சொன்னார்.

ஒரு தத்துவஞானி செருப்புக்கூட அணியாதவர். தினமும் கடைவீதி செல்வார். ஒவ்வொரு கடையிலும் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு அடுத்த கடைக்குச் செல்வார். எல்லாம் பார்ப்பதுடன் சரி. எதையும் வாங்கியதே இல்லை. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெறுமனே திரும்பி வந்து விடுவார்.

அவருடைய நண்பர், நீ ஏன் தினமும் கடைவீதி செல்கின்றீர் என ஞானியிடம் கேட்க, அங்கு என்னென்ன பொருள்கள் விற்கின்றன என்பதைப் பார்க்க என்றார். நீங்கள் அந்த பொருள்களிலிருந்து எதையும் வாங்கி வந்ததாக இதுவரை தெரியவில்லையே என்று சொன்னதற்கு ஞானி, “அங்கு விற்கப்படும் பொருட்கள் இல்லாமல் நான் எவ்வளவு நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்பதைப் புரிந்து கொள்வதற்காக எனச் சொன்னார்.”

இந்தக் கதையை கேட்ட இளைஞன், இதை ஏன் என்னிடம் கூறுகின்றீர்கள் என்றான். அதற்கு பெரியவர் பக்தி என்பது உனக்கு என்ன தேவை என்பதை சொல்லிக் கொண்டிருக்க அல்ல. பக்தியின் மூலம் உனக்கு தேவையற்றதை தெரிந்து ஒதுக்குவதற்குத்தான் என்ற உண்மையை நீ புரிந்துகொள்ள வேண்டும் என்றார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2020, 14:50