விதையாகும் கதைகள்: ஆளைப்பார்த்து எடைபோடுதல் நல்லதல்ல
மேரி தெரேசா: வத்திக்கான்
ஆர்.எம்.அழகப்ப செட்டியார் அவர்கள், இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற கல்வி வள்ளலாகத் திகழ்ந்தவர். இவர் ஒருமுறை, வர்த்தகம் தொடர்பாக, பம்பாய்க்குச் சென்றிருந்தார். அச்சமயம், ஐரோப்பிய முறையில் நடத்தப்பட்ட பயணியர் மாளிகை ஒன்றிற்குச் சென்று, “தங்குவதற்கு ஓர் அறை வேண்டும்” என்று கேட்டார். மிக எளிய தோற்றத்துடன், பணத்திமிர் ஏதுமின்றி, ஆடம்பரமற்று காட்சியளித்த செட்டியார் அவர்களை, ஏற இறங்கப் பார்த்தார், அந்த மாளிகை நிர்வாகி. இந்த சாமானிய மனிதர் அதிகப் பணம் செலவுசெய்து இங்கு தங்கக்கூடியவர் அல்ல என்று தனக்குத்தானே தீர்மானித்துக்கொண்டு, “இங்கு அறை ஏதும் காலி இல்லை” என்று சொன்னார், நிர்வாகி. அங்கு பல அறைகள் காலியாக இருப்பது செட்டியார் அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அந்த நிர்வாகியின் மனநிலையை அறிந்த செட்டியார் அவர்கள், “நன்றாய்ப் பார்த்துச் சொல்” என்று சொன்னார். “நன்றாய்ப் பார்த்துத்தான் சொல்கிறேன்” என்று பதில் சொன்னார், அந்த நிர்வாகி. எனவே அழகப்ப செட்டியார் அவர்கள், “இந்த மாளிகையில் எத்தனை அறைகள் இருக்கின்றன!” என்று நிர்வாகியிடம் கேட்டார். அதற்கு அந்த நிர்வாகி, “நீ என்ன இந்த விடுதியை விலைக்கா வாங்கப் போகிறாய்?” என்று ஏளனமாக கேட்டார். “ஆமாம், விலைக்கு வாங்கத்தான் போகிறேன், என்ன விலை?” என்று கேட்டார், செட்டியார். இதைக் கேட்டு திகைத்துப்போன நிர்வாகி, இலட்சக்கணக்கில் ஒரு தொகையை, அந்த பயணியர் மாளிகையின் விலையாகச் சொன்னார். உடனே, அழகப்பச் செட்டியார் அவர்கள், சிறிதும் தாமதிக்காமல், தனது கைப் பையைத் திறந்து, காசோலைக் கட்டை எடுத்து, அந்த நிர்வாகி சொன்ன தொகையை அதில் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆமாம். அன்று டாக்டர் அழகப்பச் செட்டியார் அவர்கள், பம்பாயின் அந்த ரிட்ஸ் பயணியர் மாளிகையை உண்மையிலேயே விலைக்கு வாங்கி விட்டார். ஆம். ஆளைப்பார்த்து எடைபோடுதல் கூடாது. அழகப்பச் செட்டியார் அவர்கள், வியாபார விடயத்தில் மட்டுமல்ல, கல்விக்கும், தர்மச் செயல்களுக்கும் பணத்தை வாரி வழங்கிய வள்ளல். தமிழகத்தின் பொறியியல் கல்வி வரலாற்றில், மூன்று பொறியியல் கல்லூரிகள் முதலில் தோன்றுவதற்கு வித்தூன்றிய ஓர் அற்புத மனிதர் இவர். அழகப்பச் செட்டியார் அவர்கள், 1909ம் ஆண்டு காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூரில் பிறந்தவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்