விதையாகும் கதைகள் : நலம் பெற நல்ல மருந்து
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உளவியல் மருத்துவரிடம் வந்த ஒருவர், டாக்டர் நீங்கள்தான் என்னை எப்படியாவது குணப்படுத்தவேண்டும் என்றார்.
உங்களுக்கு என்ன நோய்? விளக்கமாகச் சொல்லுங்கள்? என்று கேட்டார் மருத்துவர்.
இரவில் நான் கட்டிலின் மேல் படுத்தவுடன் கட்டிலின் கீழ் யாரோ இருப்பதைப் போல் தோன்றுகிறது. கட்டிலை விட்டு கீழே இறங்கிப் பார்க்கிறேன். அங்கு யாரும் இல்லை. பயம் போவதற்காக நான் கட்டிலின் கீழேயே படுத்துக் கொள்கிறேன். இப்போது கட்டிலின் மேலே யாரோ படுத்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. இப்படியே இரவு முழுவதும் கட்டிலின் மேலும் கீழும் மாறி மாறிப் படுத்துக் கொண்டே இருக்கிறேன். இதனால் எனக்கு பைத்தியமே பிடித்து விடும்போல் இருக்கிறது என்றார்.
உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். வாரந்தோறும் இரண்டு முறை தவறாமல் என்னை இரண்டாண்டுகள் வந்து பார்க்க வேண்டும். என்னை ஒவ்வொரு முறை சந்திப்பதற்கும், ஆயிரம் ரூபாய் கட்டணம் தர வேண்டும், என்ன சொல்கிறீர்கள்? என்றார் மருத்துவர்.
நிறைய செலவாகும் போல இருக்குதே? என்னால் இவ்வளவு தொகையை புரட்ட முடியுமா? என்று தெரியவில்லை, எதற்கும் என் மனைவியைக் கேட்டு விட்டு, அடுத்த வாரம் சொல்கிறேன், என்று சொல்லிவிட்டு புறப்பட்டர் அவர்.
ஒரு வாரம் கடந்தபின் மருத்துவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அவர், டாக்டர் என் மனைவி என் நோயை குணப்படுத்தி விட்டார் என்றார்.
மருத்துவரால் அதை நம்பமுடியவில்லை. எப்படி? என்று கேட்டார்.
என் மனைவி நான் படுக்கும் கட்டிலின் கால்களை வெட்டிவிட்டார் என்று பதில் வந்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்