தேடுதல்

ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் சென் குரு ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் சென் குரு 

விதையாகும் கதைகள் : வளைந்து கொடுக்கும் நாணல்

வெள்ளம் வரும்போது, வளைந்து கொடுக்கும் நாணல், பின்னர் நிமிர்ந்து நிற்கும். எதிர்த்து நிற்கும் பெரும் மரமோ, வேரோடு சாய்ந்து, வெள்ளத்தோடு போய்விடும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

சென் குரு பாங்கெய் அவர்கள் உரை வழங்கும் நேரத்தில், மாணவர்கள் மட்டுமல்ல, உயர் பதவியிலிருப்பவர்களும் அவரது உரையைக் கேட்க கூட்டமாய் வருவது வழக்கம். அவர், தன் உரையில், பெரும் வேதாந்த விளக்கங்கள் தந்து, நேரத்தைச் செலவழிக்காமல், தன் இதயத்திலிருந்து வரும் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். எனவே, அவரது உரை அனைவரையும் கவர்ந்தது.

இதைக் கண்ட நிச்சீரன் என்ற மற்றொரு குருவுக்கு பொறாமையும், கோபமும் அதிகமானது. எனவே, பாங்கெய் அவர்கள் போதித்துக் கொண்டிருந்தபோது, அவருடன் வாதிடும் நோக்கத்தில் அங்கு சென்ற நிச்சீரன் அவர்கள், உரத்தக் குரலில், "ஏய், போதகரே, மனிதர்கள் எல்லாரும் நீர் சொல்வதற்கு முற்றிலும் கீழ்படிவார்களாமே. எங்கே, என்னைக் கீழ்ப்படிய வைத்துவிடும், பார்ப்போம்" என்றார். பாங்கெய் அவர்கள், அவரிடம், "இங்கே அருகில் வாருங்கள். நான் இதை எப்படி செய்கிறேன் என்று காட்டுகிறேன்" என்றார்.

நிச்சீரன், அவர் அருகில் சென்றார். பாங்கெய் அவர்கள், புன்முறுவலுடன், "என் இடது பக்கமாய் வாருங்கள்" என்றார். நிச்சீரன் அப்படியே செய்தார். "மன்னிக்கவும். என் வலது பக்கம் வந்தால், நாம் இதைப்பற்றி இன்னும் தெளிவாகப் பேசலாம்" என்றார் பாங்கெய். நிச்சீரன் அப்படியே செய்தார். அப்போது, பாங்கெய் அவர்கள், நிச்சீரனிடம், "பார்த்தீர்களா? நான் உங்களிடம் சொன்னவற்றையெல்லாம் செய்தீர்கள். நீங்கள், ஓர் உன்னதமான மனிதர். இப்போது அமருங்கள், நாம் பேசுவோம்" என்றார்.

வெள்ளம் வரும்போது, வளைந்து கொடுக்கும் நாணல், பின்னர் நிமிர்ந்து நிற்கும். எதிர்த்து நிற்கும் பெரும் மரமோ, வேரோடு சாய்ந்து, வெள்ளத்தோடு போய்விடும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 February 2020, 14:14