தேடுதல்

ஆட்டுக்குட்டியுடன் விளையாடும் குழந்தைகள் ஆட்டுக்குட்டியுடன் விளையாடும் குழந்தைகள் 

விதையாகும் கதைகள் : நன்மையால் வெல்வோம்

பக்கத்துவீட்டுக்காரர் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா, அல்லது, எதிரியாக இருப்பதில் விருப்பமா?” என்று கேட்டால் என்ன பதில் சொல்வோம்?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

அந்தக் கிராமத்தில் ஓர் ஏழை விவசாயி இருந்தார். அவருக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரர் இருந்தார். வேட்டைக்காரரிடம் அவர் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரரின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதுமாக இருந்தன. இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரரான வேட்டைக்காரரை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன, காயப்படுத்துகின்றன” என்றார். வேட்டைக்காரர் சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட குணம். அதுக்கெல்லாம் நான் ஒன்றும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றார். இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரரின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விவசாயிக்கும் வேட்டைக்காரருக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் பஞ்சாயத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரரை தண்டித்து, அபராதம் விதித்து அவரின் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும். ஆனால், நீ தேவையின்றி இதனால் ஓர் எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவருக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரர் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?” என்று கேட்டார். பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள எதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரரை ஒரு நண்பனாக பார்ப்பதில்தான் தனக்கு விருப்பம் என்றார். அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விடயங்களை அவரிடம் சொன்னார்.

வீட்டுக்கு வந்த விவசாயி, தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரரின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தார்.

குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே மகிழ்ச்சி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள். தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுகாக்க, தற்போது வேட்டைக்காரர், நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவர் நாய்களை சங்கிலியால் பிணைத்தார். தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவருக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தார் வேட்டைக்காரர். இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

ஆடுகள் முக்கியம் தான். ஆனால், அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா.......???

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 January 2020, 16:11