தேடுதல்

கரையோரத்தில் துறவி கரையோரத்தில் துறவி 

விதையாகும் கதைகள்: வாதிடும்போது, மனங்கள் அருகருகே இருக்கட்டும்

ஒருவர் ஒருவருடன் வாதிடும்போது, மனங்கள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்! மனதின் தொலைவை அதிகரிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்!

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கங்கை கரையோரம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார் ஒரு துறவி. தன் சீடர்களிடம் திரும்பிய துறவி, சிரித்துக்கொண்டே, "ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்?" என்று கேட்டார். சீடர்களில் ஒருவர், "கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்! அதனால் சத்தமிடுகிறோம்!" என பதிலுரைக்க, துறவியோ, "ஆனால், உனக்கு மிக அருகில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்? அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார்கள்! நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துரைக்கலாமே! " என கேட்டார். ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் கூறினர். ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை! கடைசியாக துறவி அவர்களை நோக்கி, "எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனம் இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்! மனம் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை பயன்படுத்தி சத்தம்போட வேண்டியிருக்கும்! ஆனால் இதுவே, இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது? அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சப்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்! காரணம், அவர்களின் மனங்கள் வெகு அருகிலேயே இருக்கும்! மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது, மனங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்! இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது! அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!" என்று எடுத்துரைத்தார். கடைசியாக அவர்களிடம், "அதனால் நீங்கள் ஒருவர் ஒருவருடன் வாதிடும்போது, உங்கள் மனங்கள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்! மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்! அப்படி செய்யாமல் போனால், ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும்நிலை வந்துவிடும்", என அறிவுரை கூறினார் துறவி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 January 2020, 13:16