தேடுதல்

கங்கை நதியில் நீராடும் பக்தர் கங்கை நதியில் நீராடும் பக்தர் 

விதையாகும் கதைகள்: ஆசை எனும் சுமையுடன் நீந்திடல் சிரமம்

பிறக்கும்போது எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும்போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால், வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக்கொண்டு கரையை நோக்கி நீந்தினார் அவர். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டு தப்பிக்கக் கடும் முயற்சி செய்தார் அவர். ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தபோது, அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டதை உணர்ந்தார். கரைக்கு வந்த அவர், அழகான கைத்தடியை இழந்துவிட்டேனே என்று கதறினார். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததைப் பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினார்.

துறவி அவரை நோக்கி, ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்துகொண்டு போகிறது. அப்படி இருக்கையில், அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்றுவிட்டீர்களா?'' என்று கேட்டார்.

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அதுதான் காரணம். (இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2020, 13:55