தேடுதல்

2019 நொபெல் இயற்பியல் விருது பெறும் மூவர் : ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் 2019 நொபெல் இயற்பியல் விருது பெறும் மூவர் : ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் 

நொபெல் இயற்பியல் விருது: மூவருக்கு பகிர்ந்தளிப்பு

நொபெல் இயற்பியல் விருது அறிவிக்கப்பட்டுள்ள மூவரில், ஜேம்ஸ் பீப்ள்ஸ் கானடாவையும், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகியோர் சுவிட்சர்லாந்தையும் சேர்ந்த அறிவியலாளர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

அண்டவியல், சூரியக்குடும்பத்திற்கு வெளியேவுள்ள கோள்கள் குறித்த ஆய்வுகளுக்காக,  நொபெல் இயற்பியல் விருது, ஜேம்ஸ் பீப்ள்ஸ் (James Peebles), மைக்கேல் மேயர் (Michel Mayor), திதியர் க்யூலோஸ் (Didier Queloz) ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது என அக்டோபர் 08, இச்செவ்வாயன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில், ஜேம்ஸ் பீப்ள்ஸ் கானடா நாட்டையும், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகியோர் சுவிட்சர்லாந்து நாட்டையும் சேர்ந்த அறிவியலாளர்கள் ஆவர்.

சூரியனைப் போன்ற மற்றொரு விண்மீன் மற்றும், அதைச் சுற்றிவரும் கோளைக் கண்டுபிடித்ததற்காக மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகிய 2 பேருக்கு நொபெல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்டவெளி உருவானது குறித்தும், அண்டவெளியில் பூமியின் இருப்பிடம் குறித்த ஆய்வுக்காகவும், ஜேம்ஸ் பீப்ள்ஸ்க்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

5 கோடியே 74 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு தொகையில் ஒரு பாதியில் ஜேம்ஸ் பீப்ள்ஸ் பெற உள்ளார். மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகியோருக்கு மீதி தொகை பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆல்பிரட் நொபெல்

டைனமைட் உள்ளிட்ட 355 பொருட்களைத் தயாரித்து பெரும் பொருள் ஈட்டிய சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நொபெல் அவர்கள், தனது மறைவுக்குப் பின்னர், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்க உயில் எழுதி வைத்திருந்தார்.

இதன்படி கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் உலக அளவில் சிறந்தவர்களுக்கு நொபெல் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நொபெல் விருதுக் குழுவினர் இந்த ஆண்டு பரிசுக்குரியவர்களை அறிவித்து வருகின்றனர். அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வில்லியம் ஜி காலின், கிரேக் எல் செமென்ஸா, இங்கிலாந்தைச் சேர்ந்த சர் பீட்டர் ராட்கிளிப் ஆகியோருக்கு 2019-ம் ஆண்டுக்கான, நொபெல் மருத்துவ விருது அறிவிக்கப்பட்டது.

இதனிடையே அக்டோபர் 9-ம் தேதி வேதியியலுக்கும், 10-ம் தேதி இலக்கியத்துக்கும், 11 ம் தேதி அமைதிக்கும் நொபெல் விருதுகள் அறிவிக்கப்படும். (Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2019, 16:10