ஜகார்த்தா பேராயரை கர்தினாலாக உயர்த்தியதற்கு நன்றி
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இந்தோனேசியாவின் ஜகார்த்தா பேராயர் Ignatius Suharyo Hardjoatmodjo அவர்கள் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது, இந்தோனேசிய அரசு.
அக்டோபர் 5, இச்சனிக்கிழமை மாலையில், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய புதிய கர்தினால்கள் திருநிலைப்பாட்டு திருவழிபாட்டில் கலந்துகொண்ட, இந்தோனேசிய சமய விவகாரத்துறை அமைச்சர் Lukman Hakim Saifuddin அவர்கள், திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார்.
ஆசியச் செய்திக்குப் பேட்டியளித்த Saifuddin அவர்கள், இந்தோனேசியாவின் சிறந்த மகன்களில் ஒருவர் மீது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நம்பிக்கை வைத்திருப்பதற்கு, இந்தோனேசிய அரசு நன்றி கூறுவதாகத் தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 13 புதிய கர்தினால்களுக்கு தொப்பியும், மோதிரமும், வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, Saifuddin அவர்கள், இந்தோனேசிய அரசுப் பிரதிநிதிகளுடன் அக்டோபர் ஒன்றாந்தேதியே உரோம் வந்துள்ளார்.
அக்டோபர் 2ம் தேதி, புதன் பொது மறைக்கல்வியுரையிலும் கலந்துகொண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார், அமைச்சர் Saifuddin. அபு தாபியில் திருத்தந்தை கையெழுத்திட்டுள்ள மனித உடன்பிறந்தநிலை என்ற ஏட்டிற்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார். (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்