பூமியில் புதுமை – இயற்கை ஆர்வத்தால் வேலையைத் துறந்தவர்
விக்டர் தாஸ் – வத்திக்கான்
பேராவூரணியில் உள்ளது 564 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் ஏரி. இந்த ஏரியை அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து `கைபா' என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ரூ.24 லட்சம் செலவில் பெரும் முயற்சி எடுத்து ஏரியைத் தூர்வாரி முடித்திருக்கிறார்கள். இதற்கு வித்திட்டவர் பேராவூரணி அருகே உள்ள நாடியம் என்ற கிராமத்தை சேர்ந்த நிமல் ராகவன் என்ற இளைஞர்.
அபுதாபியில் உள்ள ஒரு கம்பெனியில் மென்பொருள் இன்ஜினீயராகப் பணியாற்றிய இவர் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்கவேண்டும், விவசாயத்தைக் காக்கவேண்டும் என முடிவெடுத்து, தன்னுடைய வேலையை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெரியகுளம் ஏரியைத் தூர்வாரியபிறகு, கரைகளில், 6,000 பனை விதைகள் விதைத்தும், கரைகளைப் பலப்படுத்துவதற்காக, 25,000 வெட்டி வேர்களை ஊன்றியும், ஏரிக்குள் மூன்று இடத்தில் குறுங்காடுகள் அமைப்பதற்காக, மரக்கன்றுகளை நட்டும், நம்மை வியக்கவைத்திருக்கிறார். இப்போது, பெரியகுளம் ஏரியில், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் நிரம்பிக்கொண்டிருக்கிறது. இதற்காக பாடுபட்டவர்களின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்துள்ளது. வெளிநாட்டில், கைநிறைய சம்பளம் வாங்கிய வேலையை உதறிவிட்டு, இயற்கையின் மீதும், சுற்றுசூழல் மீதும் அக்கறை கொண்டு, செயல்பட்டுக்கொண்டிருக்கும் பட்டதாரி இளைஞரை, கண்டிப்பாக, நாம் பாராட்டியே ஆகவேண்டும். (நன்றி: பசுமை விகடன்)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்