பூமியில் புதுமை : கேரள விவசாயிக்கு பிரேசில் அழைப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
கேரள மாநிலம், வயநாடு அருகே, கம்மனா பகுதியைச் சேர்ந்த விவசாயி, செருவயல் ரமணா. இவர் இன்னும் தன்னுடைய நிலத்தில் பாரம்பரிய விவசாயத்தையும், உரங்களையும், விதைகளையும் மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்.
கேரளாவின் பாரம்பரிய நெல், மூலிகைகள், வாசனைத் திரவிய மரங்கள், செடிகள் போன்றவற்றின் 47 வகை விதைகளை, இன்னும் பாதுகாத்து, அவற்றை உற்பத்தி செய்து மற்றவர்களுக்கு ரமணா வழங்கி வருகிறார். இவரின் செயலைப் பார்த்த பிரேசில் நாட்டின் பெலீன் நகரில் உள்ள பல்கலைக்கழகம், அனைத்துலகக் கருத்தரங்கில் உரையாற்றுவதற்கு, அரசு சார்பில், இவருக்கு சிறப்பு அழைப்பு விடுத்தது. உயிரித்தொடர்பியல், மற்றும், சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காமல், சூழலை மாற்றாமல் வாழ்வது குறித்தும், ரமணா நடத்தும் பாரம்பரிய விதை வங்கி குறித்தும் கருத்தரங்குகளில் பேசவும் இவர் அழைக்கப்பட்டார். பிரேசில் நாட்டில் உள்ள பயிர்வகை பாதுகாப்பு மற்றும், விவசாயிகள் உரிமை ஆணையம் சார்பில், தேசிய பயிர் பாதுகாப்பு விருது, ரமணாவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்