பாலஸ்தீனாவில் தண்ணீர் பஞ்சம் பாலஸ்தீனாவில் தண்ணீர் பஞ்சம் 

உலகில் 25 விழுக்காட்டினருக்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு

கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள 17 நாடுகளில், இந்தியா 13வது இடத்தில் உள்ளது. மக்கள் தொகையில், ஏனைய 16 நாடுகளைவிட இந்தியாவில் மூன்று மடங்குக்கும் அதிகம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலக மக்கள் தொகையில் 25 விழுக்காட்டு மக்கள், கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர் என்று, WRI எனப்படும், உலக வளங்கள் நிறுவனம் கூறியுள்ளது.

உலகில் 17 நாடுகளில் வாழ்கின்ற இம்மக்கள், தண்ணீர் தட்டுப்பாட்டால் துன்புறும் நிலை, தண்ணீர் முற்றிலும் கிடைக்காத நிலைக்கு இட்டுசெல்லக்கூடும் என்று, WRI நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாடுகள், வேளாண்மை, தொழிற்சாலைகள் மற்றும் நகராட்சிகளுக்கென, 80 விழுக்காட்டிற்கும் அதிகமான தண்ணீரை, ஒவ்வோர் ஆண்டும் பயன்படுத்தி வருகின்றன எனவும், அந்நிறுவனம் கூறியுள்ளது.

கத்தார், இஸ்ரேல், லெபனான், ஈரான், ஜோர்டன், லிபியா, குவைத், சவுதி அரேபியா, எரிட்ரியா, ஐக்கிய அரபு அமீரகம், சான் மரினோ, பக்ரைன், இந்தியா, பாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஓமன், போட்ஸ்வானா என, நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளது, WRI நிறுவனம்.

இதற்கிடையே, இந்தியாவில் கர்நாடாகா, கேரளம், மகராஷ்டிரா, காஷ்மீர், மற்றும் அசாம் மாநிலங்களில் பெய்துவரும் கனத்த மழையால், சில பகுதிகள் நீரில் மூழ்கி கடுமையான நிலச்சரிவுகளை ஏற்படுத்தியுள்ளன.

ஏறத்தாழ 2,20,000க்கு அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. (Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2019, 14:55