ஜூலை 29ம் தேதி - 'அளவை மீறிய நாள்' ஜூலை 29ம் தேதி - 'அளவை மீறிய நாள்' 

பூமியில் புதுமை: ஜூலை 29ம் தேதி - 'அளவை மீறிய நாள்'

ஜூலை 29ம் தேதி, 'அளவை மீறிய நாள்' - The Overshoot Day - என்ற எச்சரிக்கையை நமக்கு விடுத்துள்ளது. ஜூலை 30ம் தேதி முதல், நாம், ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் சக்தியை, மறுபடியும் உருவாக்க இயலாத நிலையில், நமது பூமி அழிந்து வருகிறது.

ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான்

இத்தாலியின் La Stampa என்ற செய்தித்தாளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய பேட்டி ஒன்று, ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகியிருந்தது. இப்பேட்டியில், அக்டோபர் மாதம், வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் மாமன்றம் குறித்து, திருத்தந்தையிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. சுற்றுச்சூழல் குறித்தும், வரவிருக்கும் மாமன்றம் குறித்தும், திருத்தந்தை பகிர்ந்துகொண்ட ஒரு சில கருத்துக்கள் இதோ...

அமேசான் பகுதியை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்களின் சிறப்பு மாமன்றம், "இறைவா உமக்கேப் புகழ்" என்ற திருமடலின் குழந்தை என்று, திருத்தந்தை, இப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சுற்றுச்சூழல் தொடர்பாக தன்னை வந்தடைந்த ஒரு சில அதிர்ச்சித் தகவல்களை, திருத்தந்தை, இப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார்:

"அண்மையில் நான் 7 மீனவர்களைச் சந்தித்தேன். அவர்கள், கடந்த சில மாதங்களாக, கடலிலிருந்து, 6 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை திரட்டியதாகக் கூறினர். அது, எனக்கு அதிர்ச்சி அளித்தது. ஐஸ்லாந்தில் ஒரு பெரிய பனிப்பாறை மீட்கமுடியாத வண்ணம் உருகிவிட்டதாகவும், அதற்கு ஓரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளதாகவும் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். சைபீரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால், கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் உருகுகின்றன என்ற செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்தது. இவற்றையெல்லாம் விட, மற்றொரு தகவல் எனக்கு அதிக அதிர்ச்சியளித்தது" என்று திருத்தந்தை கூறியதும், அந்த அதிர்ச்சித் தகவல் என்ன என்று பேட்டியாளர் கேட்டபோது, திருத்தந்தை, 'The Overshoot Day', அதாவது, 'அளவை மீறிய நாள்' என்ற தகவல் குறித்துப் பேசினார்.

நமது பூமிக்கோளம், இயற்கை வழிகளில் சக்திகளை உருவாக்கி வருகின்றது. அச்சக்திகளை நாம் பயன்படுத்த, பயன்படுத்த, அவை மீண்டும் நம் பூமியாலும், இயற்கையாலும் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு, பூமிக்கோளம், தன் சக்தியை உருவாக்கிக்கொண்டே இருப்பதால், தன்னையே புதுப்பித்துவருகிறது. ஒவ்வோர் ஆண்டும், நமது பூமி உருவாக்கும் சக்திக்கு இணையாக, அல்லது, அதைவிடக் குறைவாக, நாம் இயற்கை சக்திகளைப் பயன்படுத்தினால், பூமி, தன் சக்தியை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கும். அதனால் பூமி வாழும்.

பூமி உருவாக்கிவரும் சக்தியிலிருந்து, இவ்வாண்டு டிசம்பர் மாதம் முடிய நாம் பயன்படுத்த வேண்டிய சக்தி அனைத்தையும், ஜூலை 29ம் தேதி, அதாவது, 5 மாதங்களுக்கு முன்னதாகவே, நாம் பயன்படுத்தி முடித்துவிட்டோம். இதனால், ஜூலை 30ம் தேதி முதல், நாம், ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் சக்தியை, மறுபடியும் உருவாக்க இயலாத நிலையில், நமது பூமியும், இயற்கையும் அழிந்து வருகின்றன. எனவே, ஜூலை 29ம் தேதி, 'அளவை மீறிய நாள்' என்ற எச்சரிக்கையை நமக்கு விடுத்துள்ளது. இந்த அதிர்ச்சித் தகவல், தன்னை அதிகம் பாதித்ததாக, திருத்தந்தை இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். (நன்றி - La Stampa)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2019, 14:53