சென்னை புறநகரில் வறண்ட ஏரிப் பகுதியில் ஓய்வெடுக்கும் ஆயர் சென்னை புறநகரில் வறண்ட ஏரிப் பகுதியில் ஓய்வெடுக்கும் ஆயர் 

பூமியில் புதுமை : ஏரியைச் சுற்றி உயிர்வேலி

பொதுவாக, விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளைச் சுற்றித்தான் உயிர்வேலி அமைப்பார்கள். ஆனால், பல்லுயிர்ப் பெருக்கத்துக்காக, தமிழகத்திலேயே முதல்முறையாக, இந்த ஏரியைச் சுற்றி உயிர்வேலி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மேரி தெரேசா - வத்திக்கான்

தமிழகம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் வாட்டி வதைத்து வருகிறது. நீர்நிலைகள் வற்றி மைதானங்களாகக் காட்சியளிக்கின்றன. இதையடுத்து,  நீர்நிலைகளை மீட்பதற்காக, அவற்றில் மண்டிக்கிடக்கும் குப்பைக்கூளங்களை அகற்றி, தூர்வாரும் பணிகளில், பொது மக்களும், தன்னார்வலர்களும், ஆங்காங்கே களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, சின்னவேடம்பட்டியில் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஓர் ஏரி, ஒரு இலட்சம் மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், ஆயிரக்கணக்கான விவசாய ஏக்கர் நிலத்துக்குப் பாசனமாகவும் இருந்து வருகிறது. சின்னவேடம்பட்டி ஏரிக்கு, மாங்கரையிலிருந்து கால்வாய் வழியாகத்தான், தண்ணீர் வரவேண்டும். ஆனால், அந்தப் பகுதிகளில், சட்ட விரோதமாகச் செம்மண் எடுப்பது போன்ற, இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதால், அந்த ஏரிக்கு, ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளாக தண்ணீரே வரவில்லை. இதையடுத்து, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் இணைந்து ஏரியைச் சுத்தம் செய்வது போன்ற களப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஏரி பல்லுயிர்களுக்கும் முக்கியம் என்பதால், தற்போது, அதாவது, ஜூன் 30, இஞ்ஞாயிறன்று, இந்த ஏரியைச் சுற்றி உயிர்வேலி அமைக்கும் பணியை அவர்கள் தொடங்கியுள்ளனர். பொதுவாக, விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளைச் சுற்றித்தான் உயிர்வேலி அமைப்பார்கள். ஆனால், பல்லுயிர்ப் பெருக்கத்துக்காக, தமிழகத்திலேயே முதல்முறையாக, இந்த ஏரியைச் சுற்றி உயிர்வேலி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அம்மக்கள், அந்த மண்ணுக்குத் தகுந்த நாட்டு மரங்கள் மற்றும் தாவரங்களை ஆய்வு செய்து தேர்ந்தெடுத்து வருகின்றனர். முழுக்க முழுக்க நாட்டு மரங்களை மட்டுமே நடவும் திட்டமிட்டுள்ளனர் (நன்றி விகடன்).

அதேநேரம், அயல்நாட்டு மரங்கள் நம் நீர்வளத்தைத்தான் சுரண்டுகின்றன என்பதைக் கவனத்தில் இருத்துவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 July 2019, 15:31