வட மாசிடோனியாவில் புலம்பெயர்ந்தோர் உலக நாள் வட மாசிடோனியாவில் புலம்பெயர்ந்தோர் உலக நாள் 

புலம்பெயர்வு பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுவோர் சிறார்

புலம்பெயர்ந்த சிறாரின் துன்பநிலையைப் புரிந்துகொண்டு, கல்விப் பணியாற்றுவதற்கு ஏற்றவகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் – யுனெஸ்கோ

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகில் ஒவ்வொரு இரண்டு நொடிகளுக்கு ஒருவர், புலம்பெயர்ந்த நிலைக்கு உள்ளாகின்றார் என்றும், இப்பிரச்சனையில் சிறாரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், புலம்பெயர்ந்தவர் உலக நாளையொட்டி வெளியான ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

'தேவையில் உள்ள திருஅவைக்கு உதவி' என்ற பொருள்படும், Aid to the Church in Need (ACN) என்ற கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு, ஜூன் 20, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட புலம்பெயர்ந்தவர் உலக நாளையொட்டி இவ்வாறு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் மக்கள் தொகையைவிட அதிகமான மக்கள், அதாவது, 7 கோடியே 8 இலட்சம் பேர், போர்கள் அல்லது அடக்குமுறைகளால் கட்டாயமாக, சொந்த இடங்களைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும், இவர்களில் ஏறத்தாழ 3 கோடியே 50 இலட்சம் பேர், சிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிரியா, மியான்மார், காங்கோ சனநாயக குடியரசு ஆகிய மூன்று நாடுகளிலிருந்தே மக்கள் பெருமளவில் புலம்பெயர்ந்துள்ளனர் Aid to the Church in Need அமைப்பு கூறியுள்ளது. (Zenit)

மேலும், புலம்பெயர்ந்தவர் உலக நாளையொட்டி, அறிக்கை வெளியிட்டுள்ள, ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு, பள்ளி செல்லும் வயதுடைய புலம்பெயர்ந்த சிறாரின் நிலை குறித்து விளக்கியுள்ளது. இச்சிறாரின் துன்பநிலையைப் புரிந்துகொண்டு கற்றுக்கொடுப்பதற்கு ஏற்றவகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என, யுனெஸ்கோவின் Manos Antoninis அவர்கள் கூறியுள்ளார்.

பள்ளி செல்லும் வயதுடைய புலம்பெயர்ந்த சிறாரின் எண்ணிக்கை, இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து 26 விழுக்காடு அதிகரித்துள்ளது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 June 2019, 15:31