சிறுவர் திருமணம் தடைசெய்யப்பட அழைப்பு
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
உலகில், 11 கோடியே 50 இலட்சம் பேர், சிறுவர்களாக இருக்கும்போதே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளவேளை, சிறுவர் திருமணங்களைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, ஐ.நா.வின் யுனிசெப், குழந்தை நல நிதி அமைப்பு, உலக சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
சிறார் திருமணம் குறித்து 82 நாடுகளில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெப் அமைப்பு, சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்களில், 2 கோடியே 30 இலட்சம் பேர், 15 வயதை எட்டுவதற்கு முன்னரே திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ளது.
ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதி, இலத்தீன் அமெரிக்கா, கரீபியின், தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில், சிறுவர் திருமணங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன என்று தெரிவித்துள்ளது யுனிசெப்.
சட்டமுறைப்படியான திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே, 76 கோடியே 50 இலட்சம் பேர் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர் என்றுரைக்கும் யுனிசெப் அமைப்பு, சிறுவர் திருமணத்தில், மத்திய ஆப்ரிக்க குடியரசு முதல் நிலையிலும், அதற்கடுத்து நிக்கராகுவா, மடகாஸ்கர் என, நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளது.
மத்திய ஆப்ரிக்க குடியரசில், 28 விழுக்காட்டு ஆண்கள், சிறுவர்களாக இருக்கும்போதே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். (UN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்