85 வயது நிரம்பிய தேவகி அவர்கள் 85 வயது நிரம்பிய தேவகி அவர்கள் 

பூமியில் புதுமை - மரங்கள் வளர்ப்பது எனது கடமை

85 வயது நிரம்பிய தேவகி அவர்கள், தனது உடல்நிலை சவாலாக இருந்தாலும் இப்போதும், நடந்துகொண்டே, மரங்களைத் தாய்போல பராமரிக்கிறார். கடமை என்ற நோக்கில் ஆரம்பித்த பயணம், சுற்றுச்சூழலுக்கும், இயற்கை பற்றி படிப்போருக்கும் மிகப் பெரிய பொக்கிஷமாக இருக்கிறது

மேரி தெரேசா - வத்திக்கான்

"மரங்கள் வளர்ப்பது எனது கடமை" என்று சொன்னவர், 85 வயது நிரம்பிய பாட்டி தேவகி. இவர், கடந்த மார்ச் மாதம், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து ’நாரி சக்தி புரஸ்கார்’ தேசிய விருதைப் பெற்றபோது, இவ்வாறு சொன்னார். தேவகி அவர்கள், கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள முத்துக்குலம் நகரைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தில் பல வருடங்களாக பெண்கள்தான் விவசாய வேலைகளைக் கவனித்து வருகிறார்கள். இவருக்கு மாமியாரைப் பார்த்த பின்னரே விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. விவசாயத்தில், மரம் செடி கொடிகளுடன் புழங்கும்போது இயற்கை மீது பற்றுதல் ஏற்பட்டு, மரங்கள் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார் இவர். ஒருசமயம், வேலை செய்துகொண்டிருக்கும்போதே ஏற்பட்ட ஒரு விபத்தால், மூன்று ஆண்டுகள் எழுந்து நடக்க முடியாமல் இருந்தார் தேவகி. அதேநேரத்தில் அவரது மாமியாருக்கும் மூப்பு காரணமாக விவசாயத்தில் ஈடுபட முடியவில்லை. அதனால் நிலம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மூன்று ஆண்டுகள் சென்று, மீண்டும் நடக்க ஆரம்பித்த தேவகி அவர்கள், தனது தோட்டத்தில் ஒரு மரத்தை நட்டார். அது இப்போது, ஒன்று இரண்டாகி, ஐந்து ஏக்கரில் காடாக வளர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில் மனைவி மரத்தை நட ஆரம்பிக்கும்போது, அவரது ஆர்வத்தைக் கண்ட கணவர், அதிகமான மரக்கன்றுகளையும், விதைகளையும் வாங்கிக் கொடுத்து காடுகளை வளர்க்க உதவியுள்ளார். இந்தக் காட்டை ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து பாதுகாத்து வருகிறார். இவரது காட்டில், ஆயிரக்கணக்கில், இருநூறு இன அரிய வகை மரங்கள் இருக்கின்றன. இவற்றில் பல அரிய வகை மருத்துவ குணம் கொண்ட தாவரங்களும் இருக்கின்றன. மரங்கள் தவிர, இரண்டு பண்ணைக் குட்டைகள், ஆடு, மாடு எனப் பல கால்நடைகளையும் வளர்த்து வருகிறார் தேவகி. இவரது தோட்டத்தில் வளரும் மரங்களில் தேக்கு, புளி, மா, மூங்கில் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. இவரது தோட்டத்தில் இருந்து கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், பூக்கள் எனப் பலவற்றையும் சேகரித்து காட்டைப் பார்க்க வருபவர்களுக்கு வழங்குகிறார். இவரது காட்டில் தஞ்சமடைய அதிகமான பறவைகள் வருவதால், பறவை ஆர்வலர்களும் அவ்வப்போது வருகை தருகின்றனர். இந்தக் காட்டைப் பாதுகாப்பதற்காகவே இவரது பேத்தி தாவரவியல் படித்துக் கொண்டிருக்கிறார். இயற்கை முறையில் காட்டை உருவாக்கி இருக்கும் தேவகி அவர்கள், இரண்டு தேசிய விருதுகளையும், பல மாநில விருந்துகளையும் பெற்றிருக்கிறார். (நன்றி விகடன்-துரை.நாகராஜன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 April 2019, 14:06