பூமியில் புதுமை : விலங்குகளின் காதலன்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
1962-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகில் உள்ள எஸ்ஸென்டென் என்ற ஊரில் பிறந்தார் ஸ்டீவ் இர்வின். தாய், தந்தை இரண்டு பேருக்கும் வனவிலங்குகள் மீது இருந்த ஆர்வம், குழந்தைக்கும் தொற்றிக் கொண்டது. ஆறு வயதிலிருந்தே, தன் உயரத்தைவிட பலமடங்கு நீளம் கொண்ட விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளுடன் விளையாடத் தொடங்கிய ஸ்டீவ் இர்வினை, பின்னாளில், விலங்குகளின் காதலனாகவும், விலங்கின ஆர்வலராகவும் வளர்த்தெடுத்தது இயற்கை. முதலைகளோடும், பாம்புகளோடும், உடும்புகளோடும் ஸ்டீவ் இர்வின் விளையாடும் நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். வனவிலங்கு என்றால் கொடூரமானது, வேட்டையாடி உண்பது என்ற செவிவழி செய்தி நம் மனதில் ஆழமாகப் பதிந்துபோன நிலையில், முதலை மற்றும், பாம்புகளைக் கட்டிப்பிடித்து விளையாடி மகிழ்ந்து, இயற்கையை மனிதருக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவந்தார் ஸ்டீவ் இர்வின். அவர் பிடித்த அந்த வனவிலங்கைக் கொஞ்சி, அதன் சிறப்பம்சங்களை விளக்கிவிட்டு, பின்னர் அதன் போக்கில் அதை விட்டுவிடுவார் என்பதுதான் சிறப்பு. அந்த விலங்குகளை அவர் கையாளும்போது, தனக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்பதைவிட, அந்த விலங்குகளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற கவனமே அதில் அதிகளவு காணப்படும். இவர் திருமணம் செய்துகொண்ட பெண்ணும் விலங்குகள் மீது ஆர்வம் கொண்டவர்தான். ஸ்டீவ் மற்றும் அவரது மனைவி டெர்ரி இர்வின் ஆகிய இருவரும் இணைந்து பங்கேற்ற நிகழ்ச்சிகள், அனைத்து மக்களாலும் விரும்பப்பட்டன.
' கடலுக்கு அடியில்' என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்துக் கொண்டிருந்தபோது, சிறிய வகை விஷ மீனின் தாக்குதலால் அவர் மரணமடைந்தார். இதனால், விலங்குகளை வெறுக்கவில்லை அவரின் குடும்பம். தற்போது அவரின் மனைவி டெர்ரி இர்வின் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் சேர்ந்து, இர்வின் அன்புகூர்ந்த விலங்குகளை சிறப்பாகப் பாதுகாத்து, பராமரித்து வருகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்