பூமியில் புதுமை : அழிந்து வரும் பறவை இனங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், நெல் சாகுபடி செய்த நிலங்களில், அழிந்து வரும் பறவை இனமான, வெண் கழுத்து நாரை அதிக அளவில் காணப்படுகிறது. விளைநிலங்கள், நீர் நிலைகளில் காணப்படும் மீன், தவளை, நத்தை, புழுக்கள், நண்டு, பூச்சிகள், வெட்டுக்கிளி உள்ளிட்டவற்றை உண்டு, உயிர் வாழும் இப்பறவை, வேட்டையாடுதல், சுருங்கி வரும் விளைநிலங்கள், ஆக்கிரமிப்புகளால் காணாமல் போகும் நீர் நிலைகள் உள்ளிட்ட காரணங்களால், நாளுக்கு நாள் அழிந்துவருகிறது. அண்மைக் காலமாக விவசாயத்தில் பயன்படுத்தும் வேதியியல் பூச்சிக்கொல்லி உரங்களால் விவசாய நிலங்களில், மீன், தவளை, வெட்டுக்கிளி உள்ளிட்டவை மரணிக்கின்றன. இது, வெண் கழுத்து நாரை உள்ளிட்ட பலவகை பறவைகளுக்கும் உணவில்லாத நிலையை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, வேதியியலால் பாதிக்கப்பட்ட பூச்சிகளை உட்கொள்ளும் பறவைகளுக்கு, மரபணுவில் பாதிப்பு ஏற்பட்டு, அதன் இனமே அழிவுக்கு உள்ளாகிறது. பறவைகள் அழிவதை, ஓர் உயிரினம் அழிவதாக மட்டும் நினைத்தால், அது அறியாமையாகும். அழிந்து வரும் ஒவ்வோர் உயிரினமும், உலகம் அழிவை நோக்கி பயணிப்பதை உணர்த்துகிறது.
எடுத்துக்காட்டாக, நீலகிரியில் வாழ்கின்ற இருவாசிப் பறவை அழிந்து போனால், அதோடு தொடர்புடைய பத்து வகை மரங்களும் அழிந்து போகும். காரணம், இருவாசிப் பறவைகள் சாப்பிட்டு வெறியேற்றுகிற விதைகளுக்குத்தான் முளைக்கும் திறன் இருக்கிறது. அதனால் தான், மரங்கள் செழித்து வளர்கின்றன என்கின்றனர் வல்லுனர்கள்.
இந்தியாவிலுள்ள பறவைகளில் 88 வகையான பறவைகள் அழிவை எதிர்கொண்டுள்ளனவாம். மனிதனின் நாகரிக வளர்ச்சியும், அறிவியல் முன்னேற்றமும் ஏனைய உயிரினங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கத்தான் உதவியிருக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்