பூமியில் புதுமை : ஆலமரத்தைக் காப்பாற்றிய கிராம மக்கள்!
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஈரோடு மாவட்டம், செரையாம் பாளையம் கிராமத்தில் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. அந்த ஊரில் மிகவும் பிரபலமான இந்த ஆலமரத்தில், ஆண்டுதோறும் ஆடி மாதம் முழுவதும் ஊர்மக்கள் திரண்டு பொங்கல் வைத்து மரவழிபாடு செய்வது வழக்கம். ஆனால், திடீர் என்று வந்தது, அந்த ஆலமரத்துக்கு ஒரு சோதனை. இந்த ஊர் வழியாக கொண்டு செல்லப்படும் உயர் அழுத்த மின்பாதை கோபுரம் அமைக்க, இந்த ஆலமரம் இடைஞ்சலாக இருப்பதாக கூறியது, மின்வாரியம். அத்துடன் அதை அடியோடுப் பிடுங்கி எறிய பொக்லைன் இயந்திரத்தோடு மின்வாரியம் கிளம்பிவர, விழித்துக்கொண்ட கிராம மக்கள், ஆலமரத்தைக் காப்பாற்ற நூதன முறையில் போராடத் துவங்கினர். ஆலமரத்தை பிடுங்கி எறிய வந்த பொக்லைன் எந்திரத்தை மக்கள் விரட்டி அடித்தனர். அவர்களின் தீவிர போராட்டத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த மின்வாரியம், மின்பாதை வழித்தடத்தை மாற்றி அமைப்பதாக, உறுதி கூறியதையடுத்து, ஆற்று நீரில் இறங்கிப் போராடும் நூதன போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மகிழ்ச்சியை கொண்டாட கிராம மக்கள் ஒன்று திரண்டு, ஆலமர நிழலில் பொங்கல் வைத்து மரத்தை வணங்கி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். ( பசுமை தமிழகம்)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்