வறுமையிலும் உதவும்  பாரதிமோகன் வறுமையிலும் உதவும் பாரதிமோகன் 

இமயமாகும் இளமை : வறுமையிலும் உதவும் உள்ளம்

தன்னால் இயன்ற வேலைகள் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியையும் சேர்த்து, ஆதரவற்ற முதியோருக்கு தொய்வின்றி உதவிகள் செய்து வருகிறார் பாரதிமோகன்

மேரி தெரேசா - வத்திக்கான்

வறுமையான சூழலிலும், ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் உடைகளை, வழங்கி வருகிறார் இளைஞர் ஒருவர். நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதிமோகன் என்ற இளைஞர், ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பத்து ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்த இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன் ஊர் திரும்பி, பெற்றோர், மனைவி, மகனுடன், குடிசையில் வாழ்ந்து வருகிறார். சிறு வயதில், வறுமையில், தான் அனுபவித்த கஷ்டத்தை உணர்ந்து, வெளிநாட்டில் வேலை செய்து, சேமித்த பணத்தைக்கொண்டு, ஆதரவற்ற முதியவர்களுக்கு, தினமும் உணவு மற்றும் உடை வழங்கி வருகிறார் பாரதிமோகன். தன் குடும்பத்தினரின் ஆதரவுடன் வீட்டிலேயே உணவு சமைத்து, மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, பூம்புகார் பகுதிகளில், வறுமையில் பட்டினியால் வாடும் ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, உணவு வழங்கி வருகிறார். தன்னைப் போல மற்றவர்களும், ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற நோக்கில், தன் பணிகளை, சமூக வலைதளங்களில் இவர் பகிர்ந்துள்ளார். இதன் பயனாக, கையிருப்பு முழுவதும் கரைந்த நிலையில், இனி என்ன செய்வது என கலங்கி நின்ற பாரதிமோகன் அவர்களுக்கு, முகநுால் நண்பர்கள் கைகொடுத்து, நிதி உதவி வழங்கி வருகின்றனர். அதனுடன், தன்னால் இயன்ற வேலைகள் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியையும் சேர்த்து, ஆதரவற்ற முதியோருக்கு தொய்வின்றி உதவிகள் செய்து வருகிறார் பாரதிமோகன். (தினமலர்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 December 2018, 15:04