கூத்தன்குளத்தில் பராமரிக்கப்படும் பறவைகள் சரணாலயம் கூத்தன்குளத்தில் பராமரிக்கப்படும் பறவைகள் சரணாலயம் 

இமயமாகும் இளமை - பட்டாசு வெடிக்காத தமிழக கிராமங்கள்

சுற்றுச்சூழலை சீரழிக்காமல், பறவைகளையும், மிருகங்களையும் துன்புறுத்தாத வண்ணம் தீபாவளியைக் கொண்டாடமுடியும் என்பதற்கு, இவ்வூர் மக்கள் வழிகாட்டிகள்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

தீபாவளி என்றாலே, அனைவரின் நினைவுக்கும் வருவது பட்டாசுகள். சிதறும் சங்கு சக்கரங்களும், மின்னி மறையும் மத்தாப்புகளும் ஒலியெழுப்பும் வெடிகளும் வெடித்தால்தான் தீபாவளி என்று நினைப்பவர்கள் பல்லாயிரம் பேர். ஆனால், பட்டாசுகள் இல்லாமல், வெடி சப்தம் இல்லாமல், தமிழகத்தின் ஒரு சில கிராமங்கள், கடந்த சில ஆண்டுகளாக, தீபாவளியைக் கொண்டாடி வருகின்றன.

அவற்றில் முக்கியமான கிராமம், கூந்தன்குளம். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள சிறு கிராமம் கூந்தன்குளம். இந்த ஊருக்கு ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. குறிப்பாக சைபீரியா, மத்திய ஆசியா, வட இந்தியப் பகுதிகளில் இருந்து கூந்தன்குளம் வரும் பறவைகள், அங்கேயே முட்டையிட்டு, அடைகாத்து, தன் இனத்தை விரிவாக்குகின்றன.

ஏறத்தாழ, 1 இலட்சத்துக்கும் அதிகமான பறவைகள், தீபாவளியை ஒட்டிய நவம்பர் மாதத்தில் கூந்தன்குளம் வந்து, அடுத்த ஜூன் மாதத்தில், சொந்த இடம் திரும்புகின்றன. இதனால், கூந்தன்குளம் கிராமத்தில், பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டு, 43 வகைக்கும் மேலான நீர்ப்பறவை இனங்கள் பராமரிக்கப்படுகின்றன.

கூந்தன்குள கிராம மக்களே பறவைகள் சரணாலயத்தைப் பராமரித்து மேற்பார்வை செய்கின்றனர். பறவைகளை அச்சுறுத்தாமல் இருக்க, ஒட்டுமொத்த கிராமமும், பட்டாசுகளை, பல ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறது. 25 ஆண்டுகளாக பட்டாசுகளின் வாடையே இல்லாமல் அங்குள்ள குழந்தைகளும், இளையோரும் வளர்ந்து வருகின்றனர். அதேபோல, திருவிழா நேரங்களில், ஒலிப்பெருக்கிகளையும் அவர்கள் பயன்படுத்துவதில்லை.

ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு கிராம மக்கள், பட்டாசுகளே இல்லாமல் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். அங்குள்ள பறவைகள் சரணாலயத்துக்கு இடையூறு தரக்கூடாது என்பது, அக்கிராம மக்களின் எழுதப்படாத விதி. 19 ஆண்டுகளாக அங்கு பட்டாசுச் சத்தம் கேட்பதில்லை. அத்துடன் வெள்ளோடு கிராமத்தைச் சுற்றியுள்ள 6 கிராமங்களும் பட்டாசு வெடிப்பதில்லை என்பது, கூடுதல் சிறப்பு.

அதேபோல, சேலம் மாவட்டத்தில், ஓமலூர் அருகே உள்ள வெளவால்தோப்பு கிராமத்திலும் பட்டாசு வெடிப்பதில்லை. அங்குள்ள ஆலமரத்தில் நூற்றுக்கணக்கான வெளவால்கள், தொடர்ந்து, 75 ஆண்டுகளாகத் தங்கி வருகின்றன. இதனாலேயே அந்தக் கிராமத்துக்கு வெளவால்தோப்பு என்று பெயர் சூட்டப்பட்டது. (தி இந்து)

சுற்றுச்சூழலை சீரழிக்காமல், பறவைகளையும், மிருகங்களையும் துன்புறுத்தாத வண்ணம் தீபாவளியைக் கொண்டாடமுடியும் என்பதற்கு, இவ்வூர் மக்கள் வழிகாட்டிகள். அதேபோல், காசைக் கரியாக்காமல், வறியோரின் வயிற்றை நிரப்பி, அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் தீபாவளியைக் கொண்டாடமுடியும். இத்தகைய தீபாவளியை இளையோர் இவ்வுலகிற்கு சொல்லித்தர முன்வரவேண்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2018, 13:39