மின்யா நகரின் திருத்தலத்திற்கு திருப்பயணங்கள் தொடரும்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
எகிப்து நாட்டின் மின்யா நகரில் திருப்பயணம் மேற்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த காப்டிக் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக, ஓர் ஆலயம் உருவாக்கப்படும் என்று எகிப்து காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.
மின்யா நகரின் அன்பா சாமுவேல் (Anba Samuel) துறவு மடத்திலுள்ள திருத்தலத்திற்கு மக்கள் மேற்கொள்ளும் திருப்பயணங்கள் தொடரும் என்றும், மறைசாட்சிகளின் மரணங்கள் காப்டிக் சபையை வளர்க்கும் விதைகள் என்றும் மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இத்தகைய வெறித்தனமான தாக்குதல்கள், மக்களின் பக்தியையும், திருப்பயண ஆர்வத்தையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கும் வன்முறையாளர்களின் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறாக, இத்தகைய மரணங்கள், கிறிஸ்துவின் மீது தங்கள் ஈடுபாட்டை அதிகரிக்கின்றன என்று, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தலைமையகத்தின் அறிக்கையொன்று கூறுகிறது.
நவம்பர் 2ம் தேதி இத்தாக்குதல்களை மேற்கொண்ட அடிப்படைவாதக் குழுவைச் சேர்ந்த 19 பேர் காவல் துறையினரால் கொல்லப்பட்டனர் என்றும், கொல்லப்பட்ட திருப்பயணிகள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ஒரு இலட்சம் எகிப்திய பவுண்டுகள், அதாவது, நான்கு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் எகிப்திய அரசு அறிவித்துள்ளது. (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்