இமயமாகும் இளமை : நன்றியுணர்வால் மலரும் புதுவாழ்வு
மேரி தெரேசா - வத்திக்கான்
ஒரு மனிதர் பயனற்ற பொருள்களைக் கொண்டு, தரைபோடும் தொழிலைத் தொடங்கினார். ஆனால் அவரது கஷ்ட காலம், கடைசியில் ஒரு பைசாகூட இல்லாமல் அவர் தவித்து நின்றார். அடுத்தடுத்து துயரங்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால் அவர் மனந்தளரவில்லை. ஒருநாள் ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்தார். அதில் தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எழுதினார். அன்பான குடும்பம், நல்ல வலிமையான உடல், சுறுசுறுப்பான நல்ல நேர்மறை எண்ணம், எந்த நிலையிலும் கைவிடாத நண்பர்கள், நன்கு கற்றவர்கள் மற்றும், அவரது தொழிலில் அவருக்கு கிடைத்த அனுபவம் ஆகிய அனைத்தையும் அந்தத் தாளில் எழுதினார். இவையனைத்தையும் நினைத்து மிகவும் மகிழ்வுற்று, கடவுளுக்கு நன்றி கூறி, புதிய தொழிலைத் தொடங்க முற்பட்டார். அவருடைய தன்னம்பிக்கையும், துணிவும், எதிர்நீச்சலும் அவருக்கு வெற்றியைக் கொணர்ந்தன. ஒருசில ஆண்டுகளில் மாபெரும் தொழில் நிறுவனம் ஒன்றின் தலைவரானார் அவர். நான் அப்போதும் செல்வந்தராய் இருந்தேன், இப்போதும் அப்படியே இருக்கிறேன் என்றாராம் அந்த மனிதர்.
இளையோரே, நான் அந்த மனிதரைப் போல் இருந்திருந்தால் எவ்வளவோ முன்னேறியிருப்பேன் என்று சொல்லி, வாழ்வை விரயமாக்காமல், கடவுள் கொடுத்திருக்கும் கொடைகளை எண்ணி, அவருக்கு நன்றி கூறினால் போதும். நமக்கு மலரவேண்டியவை நம் எண்ணத்தைப் போல் மலரும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்