வெனெசுவேலா புலம்பெயர்ந்தோர் 11 நாடுகளில் நுழைய அனுமதி
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
வெனெசுவேலா நாட்டின் ஏறக்குறைய 23 இலட்சம் புலம்பெயர்ந்த மக்கள், 11 இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.
ஈக்குவதோர் நாட்டுத் தலைநகர் Quitoவில், இப்புதன், இவ்வியாழன் தினங்களில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட 11 இலத்தீன் அமெரிக்க நாடுகள், வெனெசுவேலாவின் புலம்பெயர்ந்தோரை ஏற்பதற்கு இசைவு தெரிவித்துள்ளன.
வெனெசுவேலா நாடு, மென்மேலும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்வேளை, கடவுசீட்டுகள், திருமணம் மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் போன்றவைகளைப் பெறுவதற்கு, மிகவும் கடினமாக உள்ளதாக, அந்நாட்டு மக்கள் புகார் அளித்ததையொட்டி, எல்லைகளில் கட்டுப்பாடுகளை விதித்திருந்த இலத்தீன் அமெரிக்க நாடுகள், தற்போது அவற்றைத் தளர்த்த முடிவு செய்துள்ளன.
அவசியமான ஆவணங்களைப் பெறுவதற்கு ஆயிரம் டாலர் வரையும், அவை உடனடியாகத் தேவைப்பட்டால் 5,000 டாலர் வரையும் இலஞ்சம் கேட்கப்படுவதாகவும் மக்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்