பசி இல்லா இந்தியாவை உருவாக்க 'ராபின்ஹுட்'
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்
சாலையோரங்களில் வாழ்கின்ற ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவு வழங்கும், 'ராபின்ஹுட்' இராணுவம் என்ற அமைப்பினர், இந்த ஆண்டு, பத்து இலட்சம் பேருக்கு, உணவு வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளனர்.
இராஜஸ்தானில், ராபின்ஹுட் இராணுவம் என்ற சமூகத் தொண்டு அமைப்பு, உணவகங்கள் மற்றும் திருமண வீடுகளில் மீதமாகும் உணவுகளை நேரில் சென்று சேகரித்து வந்து, அவற்றை, சாலையோரங்கள், இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் வாழ்கின்ற ஆதரவற்ற ஏழைகளுக்குப் பகிர்ந்து அளிக்கும் பணியைச் செய்து வருகின்றது.
16 ஆயிரம் பேரை உறுப்பினர்களாக் கொண்டு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ள இந்த அமைப்பு, இந்த ஆண்டுக்குள், பத்து இலட்சம் ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவு அளிக்க, இலக்கு நிர்ணயித்து உள்ளதாக தெரிவித்தது.
பசி இல்லாத இந்தியாவை உருவாக்குவதே தங்கள் நோக்கம், எனக் கூறும் இந்த அமைப்பினர், தங்களின் அமைப்பை நாடு முழுவதும் விளம்பரப்படுத்த, நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், வர்த்தக நிறுவன அதிபர்களைப் பயன்படுத்த, முயற்சி செய்து வருவதாகத் தெரிவித்தனர். (தினமலர்)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்