எதிர்மறை பாகுபாடுகளை அகற்ற சமுதாயத்திற்கு இளையோரின் அறைகூவல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்
ஜூலை,16,2018. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும், வன்முறை என்பது இன்னும் வெற்றிகொள்ளப்பட்டவில்லை என்பதை மையக்கருத்தாகக் கொண்டு, இஞ்ஞாயிறன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர், சான் எஜிதியோவின் ஐரோப்பிய இளையோர் குழு.
சான் எஜிதியோ அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நட்புணர்வு குறித்த உலக கருத்தரங்கில் கடந்த வெள்ளி முதல் கலந்துகொண்ட ஐரோப்பிய இளையோர் குழு, அக்கருத்தரங்கின் இறுதி நாளான இஞ்ஞாயிறன்று, உரோம் புறநகர் பகுதியில் உள்ள Fosse Ardeatine எனுமிடத்தில் கூடி, மனிதர்கள் பல வழிகளிலும் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது தடை செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த அறிக்கையை வெளியிட்டனர்.
1944ம் ஆண்டு, ஜெர்மன் படைகளால் 335 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட Fosse Ardeatine நினைவிடத்தில் அவர்களின் கல்லறைகளுக்கு மலர்களை வைத்து செபித்த இந்த இளையோர் குழுவுக்கு, சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பின் தலைவர்களும், உரோம் நகர் யூத தலைமைக் குருவும் உரைகள் வழங்கி, பாகுபாடுகளுக்கு எதிராக இளையோர் மேற்கொள்ளும் முயற்சிக்கு தங்கள் ஊக்கத்தை வழங்கினர்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர், இத்தனை ஆண்டுகள் சென்றாலும், வெற்றிகொள்ளப்படமுடியாத வன்முறை என்பது, ஐரோப்பிய கண்டத்தில், இன்னும் மாசுகேட்டை வளர்த்து வருகின்றது என தங்கள் அறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ளனர், சான் எஜிதியோ ஐரோப்பிய இளையோர்.
இன்றையை உலகின் பாராமுகம், மற்றவர் குறித்த அக்கறையின்மை, முற்சார்பு எண்ணங்கள், யூத விரோதப்போக்குகள், இனவெறி ஆகியவற்றால் அதிகமாகப் பாதிக்கப்படுவது, ஏழைகளும், முதியோரும், வீடற்றோரும், மாற்றுத்திறனாளிகளும், அகதிகளும், குடிபெயர்வோரும் என்பதை இளையோரின் அறிக்கை கூறியுள்ளது.
அனைவரும் நட்புணர்வில் வாழும் ஓர் ஐரோப்பாவை கட்டியெழுப்புவதற்கு உழைக்க வேண்டிய கடமையையும் தங்கள் செய்தியில் வலியுறுத்தியுள்ளனர், இந்த இளையோர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்