செவ்வாய் கோளத்தில் 20 கி.மீ பரப்பளவுள்ள ஏரி கண்டுபிடிப்பு
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
செவ்வாய் கோளத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்திருப்பதாக அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.
'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்ற செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்தபோது, சிவப்பு கோளான செவ்வாயின் துருவ பனி முகடுகளுள்ள கிழக்குப்பகுதியில், 20 கிலோமீட்டர் பரப்பளவுக்கு இந்த ஏரி பரந்து விரிந்திருப்பதாக அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.
இதற்கு முந்தைய ஆய்வுகள், செவ்வாய் கோளத்தின் மேற்பரப்பில், குறிப்பிட்ட காலத்தில் மட்டும் தண்ணீர் பாய்வதற்கு சாத்தியமான ஆதாரங்களை கண்டறிந்திருந்தது. இந்நிலையில், முதல் முறையாக, தொடர்ந்து தண்ணீர் பாய்வதற்குரிய ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது.
ஏரிப் படுகை போன்ற நீர் ஆதாரங்கள் செவ்வாய் கோளத்தின் மேற்பரப்பில் முன்னொரு காலத்தில் இருந்தது என்று நாசாவின் ‘கியூரியாசிட்டி’ விண்கலம் கண்டறிந்திருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் திட்டத்தின் கீழ் செவ்வாய் கோளத்துக்கு அனுப்பப்பட்ட மார்சிஸ் என்ற ராடார் கருவியின் உதவியுடன் புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
"இது ஒருவேளை, மிகப்பெரிய ஏரி அல்ல" என்று ஆய்வு நடத்திய இத்தாலிய தேசிய கல்வி நிறுவனத்தின் விண்வெளி இயற்பியல் (Astrophysics) துறையின் பேராசிரியர் ரொபெர்த்தோ ஒரோசெய் (Roberto Orosei) அவர்கள் கூறியுள்ளார்.
தண்ணீரின் அடுக்கு எவ்வளவு ஆழமாக இருக்கும் என்பதை ஆய்ந்தறிய முடியவில்லை. ஆனால், அது குறைந்தது ஒரு மீட்டர் ஆழம் இருக்கும் என்று ஆய்வுக் குழுவினர் மதிப்பிட்டுள்ளனர். (பிபிசி தமிழ்)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்