அன்பையும் நட்பையும் ஊக்குவிப்பவர்கள் - கர்தினால் Ayuso Guixot
மெரினா ராஜ் - வத்திக்கான்
இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான மாதமான ரமலான் மாதம் அவர்களது நண்பர்கள், அருகில் இருப்பவர்கள், பிற மதத்தவர்கள் குறிப்பாக கிறிஸ்தவர்களுடனான உறவு வலுப்படவும் கட்டமைக்கப்படவும் உதவுகின்றது என்றும், அமைதியான, இணக்கமான மற்றும் மகிழ்ச்சியான சகவாழ்வுக்கு இம்மாதம் வழிவகுக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Miguel Ángel Ayuso Guixot
மார்ச் 24 வெள்ளிகிழமை உலகெங்கும் வாழும் இஸ்லாம் மதத்தவர்கள் ரமலான் மாதத்தை துவக்கியிருக்கும் நிலையில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அன்பையும் நட்பையும் ஊக்குவிப்பவர்கள் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்ற தலைப்பில் அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர், கர்தினால் Miguel Ángel Ayuso Guixot
அமைதியான நட்புரீதியான சகவாழ்வானது மதம் சார்ந்த வன்முறையினால், சவால்களையும் அச்சுறுத்தல் கலாச்சாரத்தையும் எதிர்கொள்கிறது என்றும், அத்தகைய கலாச்சாரத்தை எதிர்கொள்வதற்கும், முறியடிப்பதற்கும் பதிலாக, நம்மை ஒன்றிணைக்கும் பிணைப்புகளின் காரணமான அன்பையும் நட்பையும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே, மேம்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான வழிகளை நாம் கண்டறிய வேண்டும் என்றும் கூறியுள்ளார் கர்தினால் Guixot
மதம், இனம், கலாச்சாரம், மொழி, அரசியல் வேறுபாடுகள் ஆகிய அனைத்தும் நமது அணுகுமுறையில்தான் தொடங்குகின்றன என்று கூறிய கர்தினால் Guixot அவர்கள், வேறுபாடுகள் ஓர் அச்சுறுத்தலாக உணரப்பட்டாலும், அதன் பல்வேறு கூறுகளில், அவரவர் குறிப்பிட்ட அடையாளத்திற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
நம்மில் இருந்து வேறுபட்டவர்களின் எதிர்மறையான அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகள் சந்தேகம், பயம், போட்டி, பாகுபாடு, விலக்குதல், துன்புறுத்தல், விவாதங்கள், அவமானங்கள்,பழிவாங்குதல்போன்றவற்றினால் வெளிப்படுகின்றன என்று எடுத்துரைத்த கர்தினால் Guixot அவர்கள், சமூக ஊடகங்கள் இத்தகைய தீங்கு விளைவிக்கும் நடத்தைகளுக்கான பொதுவான இடங்களாகவும், தொடர்பு மற்றும் நட்புக்கான வழிமுறையாக இருந்து பகை மற்றும் சண்டைக்கான கருவிகளாக மாறுகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார்.
மரியாதை, நன்மை, தொண்டு, நட்பு, அனைவர் மீதும் அக்கறை, மன்னிப்பு, பொது நலனுக்கான ஒத்துழைப்பு, சுற்றுச்சூழலில் அக்கறை உள்ள அனைவருக்கும் உதவுதல் போன்றவற்றின் வழியாக, நமது பொதுவான இல்லமாம் பூமியை பாதுகாத்து, அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் ஒன்றிணைந்து வாழ முடியும் என்றும் கூறியுள்ளார் கர்தினால் Guixot.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்