பூர்வீக இனக் குழுக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்
மெரினா ராஜ் - வத்திக்கான்
பூர்வீக இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்கள் மதிப்புடன் தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்பதை திருப்பீடம் எப்போதும் வலியுறுத்தி வருகின்றது என்று எடுத்துரைத்தார், பேராயர் Fortunatus Nwachukwu.
அக்டோபர் 4 இச்செவ்வாயன்று ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் அவை நடத்திய 51வது அமர்வில், பூர்வீக இன மக்களின் உரிமைகள் குறித்து சிறப்பு அறிக்கை சமர்ப்பித்தவரோடு இடம்பெற்ற உரையாடலின்போது, இவ்வாறு தெரிவித்துள்ளார், ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Fortunatus Nwachukwu.
காலனித்துவத்தினால் இன, மத, மற்றும் மொழி பாகுபாடு, வன்முறை போன்றவற்றால் பல்வேறு துன்பங்களைச் சந்தித்துள்ள பூர்வீக இன மக்களின் வாழ்வில், தற்போது பல முன்னேற்றங்கள் காணப்படுகின்றன எனவும், உலகமயமாக்கல் என்னும் அடிப்படையில், இவை தொடர்ந்து செயல்படுத்தப்பட திருப்பீடம் தோழமை உணர்வில் உதவிசெய்யும் எனவும் கூறியுள்ளார் பேராயர்.
மேலும், பலர் இயற்கைப் பேரிடர்களினாலும், இயற்கை வளங்களைச் சுரண்ட நினைத்த ஒரு சிலரின் பேராசையினாலும் தங்களது சொந்த நிலங்களை இழந்தும், பாரம்பரியம், கலாச்சாரம், கல்வி, மொழி போன்றவை அழிக்கப்பட்டு மாண்பற்ற வாழ்க்கையையும், சுகாதாரமற்ற உடல் நலத்தையும் பெற்ற இம்மக்கள், தங்களின் கலாச்சாரப்படி வாழ, பாதுகாக்கப்பட, மற்றும், தகுந்த ஊட்டச்சத்துக்கள் கொடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார் பேராயர் Nwachukwu.. .
வேறுபட்ட கலாச்சாரத்தை மதித்தல், ஒவ்வொருவரின் உள்ளார்ந்த மாண்பை அங்கீகரித்து ஏற்றல் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட "தோழமை உணர்வில் உலகமயமாக்கல்" என்பதன் அடிப்படையில் பூர்வீக இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட திருஅவை தொடர்ந்து ஒத்துழைப்பு தருகின்றது எனவும் பேராயர் Nwachukwu. எடுத்துரைத்துள்ளார்.
பாரம்பரிய அறிவாற்றலின் பாதுகாவலர்கள் - பூர்வீக இனப் பெண்கள்
பூர்வீக இனப் பெண்கள், முதன்மையான, சிறப்பான பாரம்பரிய அறிவாற்றலின் பாதுகாவலர்களாகவும், அவர்களின் அறிவும் செயல்திறனும், விவசாயம், உடல் நலம், இயற்கைவள மேம்பாடு போன்றவற்றோடு தொடர்புடையதாக இருக்கின்றன எனவும் எடுத்துரைத்துள்ளார்.
பெண்களிடம் இருந்து அவர்களது குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் இத்தகைய ஆற்றலைப் பெறுகின்றனர் எனவும், திருத்தந்தை கானடா திருத்தூதுப் பயணத்தில் கூறியுள்ளவாறு, பெண்கள் உடல் அளவில் மட்டுமன்றி, ஆன்ம வாழ்விற்கும் நிறைய ஆசிர்வாதங்களைத் தருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Nwachukwu.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்