தேடுதல்

அருளாளர் தேவசகாயம் அருளாளர் தேவசகாயம்  

மே 15, 2022ல் பத்து அருளாளர்கள் புனிதர்களாக அறிவிப்பு

மறைசாட்சி தேவசகாயம் அவர்கள், 2012ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி அருளாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இவரின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி அங்கீகரித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

2022ம் ஆண்டு மே 15, பாஸ்கா கால 5ம் ஞாயிறன்று வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் திருப்பலியில், அருளாளர் தேவசகாயம் அவர்கள் உட்பட பத்து அருளாளர்களை புனிதர்களாக அறிவிக்கவுள்ளார்

மே 15, ஞாயிறு உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் பகல் 1.30 மணிக்குத் துவங்கும் இத்திருப்பலியில் Titus Brandsma, இலாசர் எனப்படும் தேவசகாயம், César de Bus, Luigi Maria Palazzolo, Giustino Maria Russolillo, Charles de Foucauld, Marie Rivier, Maria Francesca di Gesù Rubatto, Maria di Gesù Santocanale, Maria Domenica Mantovani ஆகிய பத்து அருளாளர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நட்டாலம் என்ற ஊரில் 1712ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி அருளாளர் தேவசகாயம் அவர்கள் பிறந்தார். 1752ம் ஆண்டு, சனவரி மாதம் 14ம் தேதி, தென் திருவாங்கூர் மன்னராக ஆட்சிசெய்த மார்த்தாண்ட வர்மா காலத்தில், குமரி மாவட்டத்தில், ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில், தேவசகாயம் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார். மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளை அவர்களின் கல்லறை, கோட்டாறு மறைமாவட்ட சவேரியார் முதன்மைக் கோவிலில் உள்ளது. 2012ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இவர் அருளாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இவரை அதிகாரப்பூர்வமாகப் புனிதராக அறிவிப்பதற்கு வழியமைக்கும், இவரின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதியன்று அங்கீகரித்துள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 May 2022, 16:36