பேராயர் வின்சென்சோ பாலியா பேராயர் வின்சென்சோ பாலியா 

மருத்துவ சிகிச்சையில் புறக்கணிப்பு என்பதற்கே இடமில்லை

நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், தடுப்பூசிகள் சமமாக விநியோகிக்கப்படும் விடயத்தில் அனைவரும் ஒருமித்து குரல் எழுப்பவேண்டும் - பேராயர் பாலியா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் மக்கள் பலர், வாழ்வைப் பாதுகாக்கும் மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதற்கு இடர்களைச் சந்தித்துவரும்வேளை, உலகெங்கும் பெருந்தொற்று தடுப்பூசிகள் சமமாக விநியோகிக்கப்படவேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருப்பீட வாழ்வுக் கழகம், உலக மருத்துவ கழகம் (WMA), ஜெர்மன் மருத்துவ கழகம் (GMA), ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து, ஜூலை 01, இவ்வியாழனன்று நடத்திய மெய்நிகர் கலந்துரையாடல் பற்றி, இவ்வெள்ளியன்று கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

உலகெங்கும் தடுப்பூசிகள் சமமாக விநியோகிப்படுவதை ஊக்குவித்துவரும் இந்த அமைப்புகளின் தலைவர்கள், தடுப்பூசிகளைப் பெறுவதற்கு நிலவும் தயக்கங்கள் பற்றிய  தங்கள் கருத்துக்களையும் எடுத்துரைத்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலை துவக்கிவைத்து உரையாற்றிய, திருப்பீட வாழ்வுக் கழகத்தின் தலைவர், பேராயர் வின்சென்சோ பாலியா அவர்கள், தடுப்பூசிகளை வாங்குவதற்கு வசதி இல்லாத, வருமானம் குறைவாக உள்ள நாடுகள் என்ற பாகுபாடின்றி, அவை  எல்லா நாடுகளுக்கும் சமமாக விநியோகிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

மருத்துவச் சிகிச்சையில் புறக்கணிப்பு என்பதற்கே இடமில்லை என்பதையும் வலியுறுத்திய பேராயர் பாலியா அவர்கள், நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், இந்த விடயத்தில் அனைவரும் ஒருமித்து குரல் எழுப்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த கலந்துரையாடலில், திருப்பீட வாழ்வுக் கழகத்தின் தலைவர் பேராயர் வின்சென்சோ பாலியா அவர்களும், ஜெர்மன் மருத்துவக் கழகத்தின் பன்னாட்டு விவிகாரத் துறையின் தலைவர் டாக்டர் Ramin Parsa-Parsi அவர்களும், உலக மருத்துவக் கழகத்தின் தலைவர் டாக்டர் Frank Ulrich Montgomery அவர்களும், இணையம் வழி நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2021, 14:59