சட்டங்களை உருவாக்குவதில், மத நம்பிக்கையாளர்கள் பங்கேற்க...
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஐரோப்பிய நாடுகளில், சட்டங்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், பொதுமக்களின் பங்கேற்பு இன்னும் அதிகமாக இடம்பெறவேண்டும் என்றும், குறிப்பாக, மத நம்பிக்கையுள்ளவர்களின் பங்கேற்பு உறுதிசெய்யப்படவேண்டும் என்றும் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு அவை ஒன்றில் உரையாற்றினார்.
ஐரோப்பாவில் பாதுகாப்பையும், கூட்டுறவையும் வளர்க்கும் நிறுவனமான OSCE ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி Janusz Urbańczyk அவர்கள், "குடியரசு சார்ந்த சட்டங்கள் உருவாக்குதல்: பங்கேற்பை உறுதிசெய்தல்" என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
பொதுவாக, நாடுகள், சட்டங்கள் இயற்றும் வேளையில், மத நம்பிக்கை சார்ந்த விழுமியங்களுக்கும், நன்னெறி சார்ந்த விடயங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டிய அருள்பணி Urbańczyk அவர்கள், மத நம்பிக்கையுள்ளோரின் குரலுக்கு செவிமடுப்பது அவசியம் என்பதை வலியுறுத்திக் கூறினார்.
மனிதர்களைக் குறித்த முழுமையான ஒரு புரிதலைப் பெறுவதற்கு, மத நம்பிக்கை, மனசாட்சி ஆகியவை இன்றியமையாதவை என்றும், இவற்றிற்கு உயர்ந்த இடத்தை வழங்கும் சமுதாயமே, நலமான சமுதாயமாக இருக்கமுடியும் என்றும், அருள்பணி Urbańczyk அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்