திருஅவையில் மேலும் 8 பேர், புனிதர்களாக, அருளாளர்களாக...
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்செல்லோ செமெராரோ (Marcello Semeraro) அவர்கள், டிசம்பர் 21, இத்திங்கள் பிற்பகலில், திருத்தந்தையைச் சந்தித்து, 7 இறையடியார்கள், மற்றும், இத்தாலியில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்ட ஒருவரின் வாழ்வு குறித்த சிறப்பு விவரங்களை சமர்ப்பித்தார்.
இத்தாலியின் Canicattì எனுமிடத்தில் 1952ம் ஆண்டு பிறந்த பொதுநிலையினரான Rosario Angelo Livatino அவர்கள், 1990ம் ஆண்டு, இத்தாலியின் Canicattì மற்றும் Agrigento என்ற ஊர்களுக்கு இடைப்பட்ட சாலையில், விசுவாசத்திற்காக மறைசாட்சியாக கொல்லப்பட்டது குறித்த விவரங்கள், திருத்தந்தையின் முன்னைலையில் சமர்ப்பிக்கப்பட்டன.
இஸ்பெயினில் 1470ம் ஆண்டு பிறந்து, 1565ல் மெக்சிகோவில் உயிரிழந்த இறையடியார், ஆயர் Vasco de Quiroga, இத்தாலியில் 1905ம் ஆண்டு பிறந்து 1984ம் ஆண்டு உயிரிழந்த இறையடியார், மரியின் ஊழியர் துறவு சபையைச் சேர்ந்த ஆயர் Bernardino Piccinelli, இஸ்பெயினில் 1817ம் ஆண்டு பிறந்து, 1851ல் உயிரிழந்த இறையடியார், மறைமாவட்ட அருள்பணியாளர் Antonio Vincenzo González Suárez, ஜெர்மனியில் 1906ம் ஆண்டு பிறந்து 1945ம் ஆண்டு உயிரிழந்த இறையடியார், அருள்பணி Antonio Seghezzi, 1932ம் ஆண்டு இத்தாலியில் பிறந்து 2002ம் ஆண்டு Kazakhstan நாட்டில் உயிரிழந்த இறையடியார், மறைமாவட்ட அருள்பணி Bernardo Antonini, இன்றைய போலந்து பகுதியில் 1869ம் ஆண்டு பிறந்து, 1953ம் ஆண்டு செக் குடியரசுப்பகுதியில் உயிரிழந்த பிரான்சிஸ் சேல்ஸ் துறவுசபையின் இறையடியார், அருள்பணி Dio Ignazio Stuchly, இத்தாலியில் 1954ல் பிறந்து, 1974ல் உயிரிழந்த இறையடியார், அருள்சகோதரி Rosa Staltari ஆகிய இறையடியார்கள் குறித்த விவரங்களும் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களை, அருளாளர்களாக உயர்த்தும் வழிமுறைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்