இலத்தீன் அமெரிக்காவில் கோவிட்-19ன் எதிர்விளைவு இலத்தீன் அமெரிக்காவில் கோவிட்-19ன் எதிர்விளைவு 

கோவிட்-19, 10 கோடிப் பேர் வறுமைகோட்டிற்குகீழ்

சமுதாய அநீதி, வாய்ப்புகள் வழங்கப்படுவதில் சமத்துவமின்மை, புறக்கணிப்பு, நலிந்தோருக்குப் போதுமான பாதுகாப்பின்மை போன்ற பெரிய நுண்கிருமிகள் குணமாக்கப்படவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோயின் எதிர்விளைவுகளால், உலக அளவில் 10 கோடிக்கும் அதிகமானோர் வறுமைகோட்டிற்குகீழ் வாழும் நிலை உருவாகக்கூடும் என்று, உலக வங்கி எச்சரித்துள்ளவேளை, கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பான அகில உலக காரித்தாஸ் நிறுவனம், துன்புறுவோருக்கு பரிவன்பு காட்டப்படுமாறு மீண்டும் ஒருமுறை அழைப்புவிடுத்துள்ளது.

தற்போதைய கொள்ளைநோயின் நெருக்கடியால் கடுமையாய்ப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, இதுவரை எதிர்பார்த்திருந்ததைவிட, இருமடங்கு அதிகம் என்று கூறியுள்ள காரித்தாஸ் நிறுவனம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறியோர் சார்பாக, அடிக்கடி விடுத்துவரும் விண்ணப்பங்களையும் குறிப்பிட்டுள்ளது.  

வறுமையின் நுண்கிருமி

கொரோனா கொள்ளைநோய் பரவத்தொடங்கிய நாளிலிருந்து, அறிவியலாளர்களும், மருத்துவர்களும், ஆய்வாளர்களும், தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதற்கு அயராது உழைத்து வருகின்றனர், அதேநேரம், “புறக்கணிப்பு” என்ற அவலத்தை அகற்றுவதற்கான ஊசிமருந்தை கண்டுபிடிப்பதில், அரசியல்வாதிகள், தொழில்முனைவோர், மற்றும், தனிநபர்களில், எத்தனை பேர் ஆர்வமாக உள்ளனர் என்ற கேள்வியையும், காரித்தாஸ் நிறுவனம் எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக சமுதாயத்திற்கு எண்ணற்ற விண்ணப்பங்களை முன்வைத்துள்ளார், ஆகஸ்ட் 19, இப்புதன் மறைக்கல்வியுரையிலும், நோயுற்ற சமுதாய அமைப்புமுறைகள் மாற்றப்படுவதற்கு, நாம் இப்போதே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதை, காரித்தாஸ் குறிப்பிட்டுள்ளது.

சமுதாய அநீதி, வாய்ப்புகள் வழங்கப்படுவதில் சமத்துவமின்மை, புறக்கணிப்பு, நலிந்தோருக்குப் போதுமான பாதுகாப்பின்மை போன்ற பெரிய நுண்கிருமிகள் குணமாக்கப்படவேண்டும் எனவும், ஏழைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவும் பொருளாதாரம் அமைக்கப்படவேண்டும் எனவும், திருத்தந்தை வலியுறுத்தியுள்ளதையும், உலக காரித்தாஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2020, 13:42