வெனெசுவேலாவின்José Gregorio Hernández Cisneros வெனெசுவேலாவின்José Gregorio Hernández Cisneros  

வெனெசுவேலாவின் ஏழைகளின் மருத்துவர் அருளாளராக..

திருஅவையில் புதிதாக நால்வர் அருளாளர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இசைவு தெரிவித்துள்ளார். தென் அமெரிக்கா மற்றும், ஐரோப்பாவைச் சேர்ந்த இந்த நால்வரும், ஏழைகள், இளைஞர்கள், மற்றும், நாடுகளின் பொதுநலன்களுக்கு நற்பணிகள் ஆற்றியவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வணக்கத்துக்குரிய மூவரின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகள், மறைசாட்சி மற்றும், இறைஊழியர் ஒருவரின் புண்ணிய வாழ்வுப் பண்புகள் குறித்த விவரங்களை ஜூன் 19, இவ்வெள்ளியன்று, ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதன் வழியாக, திருஅவையில் புதிதாக நால்வர் அருளாளர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு, திருத்தந்தை இசைவு தெரிவித்துள்ளார்.  தென் அமெரிக்கா மற்றும், ஐரோப்பாவைச் சேர்ந்த இந்த நால்வரும், ஏழைகள், இளைஞர்கள், மற்றும், நாடுகளின் பொதுநலன்களுக்கு நற்பணிகள் ஆற்றியவர்கள்.

புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு உயர்த்தும் பணிகளை ஆற்றும், திருப்பீட பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளி மாலையில், சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்து இந்த விவரங்களைச் சமர்ப்பித்தார். 

பிரான்சிஸ்கன் சபையின் வணக்கத்துக்குரிய Mamerto Esquiú அவர்கள், அர்ஜென்டீனா நாட்டின் Córdoba மறைமாவட்ட ஆயராவார். அந்நாட்டின் San Josè de Piedra Blanca என்ற நகரில் 1826ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி பிறந்த இவர், La Posta de El Suncho என்ற நகரில் 1883ம் ஆண்டு சனவரி மாதம் 10ம் தேதி இறையடி சேர்ந்தார்.

ஆண்கள் மற்றும், பெண்களுக்கென இறை மீட்பர் சபைகளைத் தோற்றுவித்த வணக்கத்துக்குரிய அருள்பணி சிலுவையின் பிரான்செஸ்கோ மரியா அவர்கள், ஜெர்மனியின் Gurtweil என்ற நகரில் 1848ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி பிறந்தார். இவர் சுவிட்சர்லாந்தின் Tafers என்ற நகரில் 1918ம் ஆண்டு, செப்டம்பர் 8ம் தேதி இறைபதம் சேர்ந்தார்.

பொதுநிலை விசுவாசியான வணக்கத்துக்குரிய José Gregorio Hernández Cisneros அவர்கள், வெனெசுவேலா நாட்டின் Isnotú என்ற நகரில், 1864ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி பிறந்து, Caracas நகரில் 1919ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி இறைவனடி எய்தினார்.

இந்த மூவரின் பரிந்துரைகளால் இடம்பெற்றுள்ள புதுமைகளை அங்கீகரித்துள்ளார், திருத்தந்தை.

மேலும், இத்தாலியின் Chiavenna நகரில் இரண்டாயிரமாம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி விசுவாசத்திற்காக கொலைசெய்யப்பட்ட அருள்சகோதரி Maria Laura Mainetti அவர்கள், சிலுவையின் புதல்வியர் சபையைச் சேர்ந்தவர். இவர், 1939ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி இத்தாலியின் கோலிக்கோவில் பிறந்தார். 

மேலும், ஏழைகளின் மறைக்கல்வி மறைப்பணி சபையின் தலைவரான இறை ஊழியர் Gloria Maria di Gesù Elizondo García அவர்களின் புண்ணிய வாழ்வுப் பண்புகள் குறித்த விவரங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறை ஊழியர் Elizondo García அவர்கள், மெக்சிகோ நாட்டின் Durango நகரில் 1908ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி பிறந்தார். இவர், Monterrey நகரில், 1966ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இறைபதம் அடைந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 June 2020, 14:39