தேடுதல்

தாய்லாந்தில் புத்தமதத் துறவிகள் தாய்லாந்தில் புத்தமதத் துறவிகள் 

பரிவன்பு, உடன்பிறந்த கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவோம்

கோவிட்-19 தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள, இந்த நெருக்கடியான நேரத்தில், மதத்தவர், நம்பிக்கை, பரிவன்பு மற்றும் பிறரன்பில் வாழ ஊக்கப்படுத்துவோம் - திருப்பீட பல்சமய உரையாடல் அவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புத்த மதத்தினரும், கிறிஸ்தவர்களும் ஒன்றுசேர்ந்து, பரிவன்பு மற்றும், மனித உடன்பிறந்தநிலை கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவோம் என்று, திருப்பீட பல்சமய உரையாடல் அவை அழைப்பு விடுத்துள்ளது.

வேசாக் விழாவை முன்னிட்டு...

இம்மாதம் 07ம் தேதி, புத்த மதத்தினர் சிறப்பிக்கும் வேசாக் (Vesakh / Hana matsuri) விழாவை முன்னிட்டு, அம்மதத்தினருக்கென, ஏப்ரல் 02, இவ்வியாழனன்று செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை, கோவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும், அவர்களைப் பராமரிப்பவர்களுக்காகச் செபிப்போம் என்றும், இந்த நெருக்கடியான நேரத்தில், நம் மதத்தவர், நம்பிக்கை, பரிவன்பு மற்றும் பிறரன்பில் வாழ ஊக்கப்படுத்துவோம் என்றும் கூறியுள்ளது. 

வேசாக் விழாவுக்கு, கடந்த 24 ஆண்டுகளாக, தொடர்ந்து வாழ்த்துச் செய்தி அனுப்பும் பாரம்பரியப் பண்பு பற்றிக் குறிப்பிட்டுள்ள இத்திருப்பீட அவை, இந்த 25வது ஆண்டில், புத்த மதத்தினருடன், தனது நட்பு மற்றும் ஒத்துழைப்பை புதுப்பிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

காயமடைந்துள்ள பூமிக்கு பரிவன்பு

காயமடைந்துள்ள மனித சமுதாயம் மற்றும், காயமடைந்துள்ள இப்பூமியில், பரிவன்பு மற்றும், மனித உடன்பிறந்தநிலைக்குச் சான்றுகளாக விளங்குவதையும், அவற்றுக்குத் தொண்டாற்றுவதையும், மதங்கள் மிகவும் மதிக்கின்றன என்று கூறும் அச்செய்தி, உலக அமைதி மற்றும் ஒன்றிணைந்து வாழ்வதற்கு அழைப்பு விடுக்கும் மனித உடன்பிறந்த நிலை அறிக்கை பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த நவம்பரில் தாய்லாந்தில் புத்தமதத் தலைவரைச் சந்தித்தபோது  (21 நவம்பர், 2019 பாங்காக்), நாம் நல்ல அயலவர்களாக, ஒன்று சேர்ந்து வளரவும், வாழவும் முடியும், இதன் வழியாக, நம் மதத்தவர் மத்தியில், புதிய பிறரன்பு வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவிக்க முடியும் என்று கூறியதையும், அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.

சந்திப்பு கலாச்சாரம் நோக்கி...

நம் மதத்தவர் ஒன்றிணைந்து வாழ்வதன் வழியாக, உடன்பிறந்த உணர்வுப் பாதையில், குறிப்பாக, வறியோரையும், தாறுமாறாகப் பயன்படுத்தப்படும் நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியையும் பாதுகாப்பதில், நம் நடைமுறைத் திட்டங்களைப் பலுகச் செய்யமுடியும் என்றும், இதன் வழியாக, பரிவன்பு, உடன்பிறந்த உணர்வு மற்றும் சந்திப்புக் கலாச்சாரத்தை உருவாக்கமுடியும் என்றும், திருத்தந்தை கூறியதை அச்செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

வேசாக் விழாவின் முக்கியத்துவத்தையும் அச்செய்தியில் விவரித்துள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை, எல்லாமே ஒன்றையொன்று சார்ந்துள்ளன, மற்றும், ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளன என்றும், இன்றைய உலகில் அன்புகலந்த கனிவு மற்றும், உடன்பிறந்த உணர்வை வளர்ப்பதில், புத்த மதத்தவர், தங்களின் கிறிஸ்தவ நண்பர்களுக்கு தோள்கொடுக்கவும், ஆதரவாக இருக்கவும், நட்புணர்வில், தாழ்மையுடன் கேட்பதாகக் கூறியுள்ளது.

கல்வியின் முக்கியத்துவம் 

மற்றவரின் தேவைகளைப் புரிந்துகொள்வதிலும்,, கருணையிலும், இன்னும் மேலாக எவ்வாறு வளரலாம் என்பதை, புத்த மதத்தினரும், கிறிஸ்தவர்களும் ஒருவர் ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்றும், உலகளாவிய ஒருமைப்பாட்டுணர்வில் நாம் தொடர்ந்து வளருவதற்கும், பயணிப்பதற்கும் கல்வி முக்கியம் என்றும், அச்செய்தி கூறியுள்ளது.

கல்வி பற்றிய, உலகளாவிய ஒரு புதிய உடன்பாட்டைக் கொணர்வதற்கென, வருகிற அக்டோபர் 15ம் தேதி நடைபெறவுள்ள உலகளாவிய நிகழ்வு, இளைஞர்களுக்கு மற்றும், இளைஞர்களுடன் நாம் ஆற்றும் பணிக்கு புதிய ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கையையும், திருப்பீட பல்சமய உரையாடல் அவை, தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளது. 

புத்த மதத்தினருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள இச்செய்தியில், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர் கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்களும், செயலர் பேரருள்திரு Kodithuwakku Indunil அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

புத்த மதத்தினரின் Vesakh விழாவில் அம்மக்கள், சித்தார்த்த கௌதம புத்தரின் பிறப்பு, அவர் ஞானம் பெற்றது மற்றும் அவரின் இறப்பைக் கொண்டாடுகின்றனர். ஜப்பானில் இவ்விழா, Hana matsuri என்று அழைக்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 April 2020, 14:01