தனியாகச் செபிப்பதற்கு திறக்கப்பட்டுள்ள ஆலயம் தனியாகச் செபிப்பதற்கு திறக்கப்பட்டுள்ள ஆலயம் 

கோவிட்-19 நெருக்கடியால் புனித வாரத் திருவழிபாடுகள்

திருச்சிலுவையின் மீது மக்கள் கொண்டுள்ள பக்தியை மனதில் வைத்து, திருச்சிலுவையின் வணக்கம், செப்டம்பர் மாதம் 14, 15 தேதிகளுக்கு மாற்றம் செய்வதற்கு, அந்தந்த மறைமாவட்டங்கள் முடிவு செய்யலாம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

Covid-19 தொற்றுக்கிருமியின் பரவலையும், வெவ்வேறு ஆயர் பேரவைகளிலிருந்து கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையும் மனதில் கொண்டு, இறைவழிபாட்டு பேராயம் புனித வார வழிபாடுகளில் மேற்கொள்ளக்கூடிய வழிமுறைகளை, மீண்டும் ஒருமுறை, மார்ச் 25, இப்புதனன்று வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு பெருவிழாவன்று, ஆயர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட வழிமுறைகளில் ஒரு சில மாற்றங்களை இணைத்து, இந்த புதிய வழிமுறைகளை, இப்பேராயத்தின் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா அவர்களும், செயலர்,  பேராயர் ஆர்தர் ரோச் அவர்களும், மார்ச் 25, ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்பு பெருவிழாவன்று வெளியிட்டுள்ளனர்.

ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா நாள், வேறொரு தேதிக்கு மாற்றியமைக்க இயலாத காரணத்தால், புனித வார திருவழிபாட்டு நிகழ்வுகள் அனைத்தும், மக்களின் பங்கேற்பின்றியும், தேவைப்படும் இடங்களில் கூட்டுத் திருப்பலியோ, சமாதானப் பகிர்வோ இன்றி நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித வாரத் திருவழிபாடுகள் அனைத்தும், வசதி உள்ள இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுதல் சிறந்தது என்றும், இந்த ஒளிபரப்புக்களின் நேரங்கள் மக்களுக்கு அறிவிக்கப்படவேண்டும் என்றும், இப்பேராயம் அறிவித்துள்ளது.

குருத்தோலை ஞாயிறன்று மேற்கொள்ளப்படும் பவனிகள், கோவிலுக்குள், அல்லது, கோவிலைச் சுற்றியுள்ள இடங்களில் நடைபெறலாம் என்றும், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை, அந்தந்த மறைமாவட்டம் மற்றொரு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித வியாழன் திருப்பலியில், காலடிகளைக் கழுவும் சடங்கு நீக்கப்பட்டுள்ளது என்றும், தனிப்பட்ட முறையில் நிகழ்த்தப்படும் இத்திருப்பலிகளின் இறுதியில், நற்கருணை பவனி, நற்கருணை ஆராதனை ஆகியவை இடம்பெறாது என்றும் இவ்வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

புனித வெள்ளியன்று மேற்கொள்ளப்படும் வழக்கமான சிறப்பு இறைவேண்டுதல்களுக்குப் பதில், நோயுற்றோர், உயிரிழந்தோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பான இறைவேண்டுதல்கள் இணைக்கப்படலாம் என்றும், திருச்சிலுவை ஆராதனையில், வழிபாட்டை நிகழ்த்துபவர் மட்டும் சிலுவையை முத்தம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிலுவையின் மீது மக்கள் கொண்டுள்ள பக்தியை மனதில் வைத்து, திருச்சிலுவையின் வணக்கம், செப்டம்பர் மாதம் 14, 15 தேதிகளுக்கு மாற்றம் செய்வதற்கு, அந்தந்த மறைமாவட்டங்கள் முடிவு செய்யலாம் என்ற வழிமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2020, 15:45