கர்தினால்களின் 33வது ஆலோசனைக் கூட்டம்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென உருவாக்கப்பட்ட கர்தினால்கள் குழு, திருப்பீடத்தில் மேற்கொண்ட 33வது சந்திப்பில் நிகழ்ந்தவற்றைத் தொகுத்து, திருப்பீட செய்தித்துறையின் தலைவர், மத்தேயோ புரூனி (Matteo Bruni) அவர்கள், செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.
பிப்ரவரி 17, இத்திங்கள் முதல், 20, இப்புதன் முடிய நடைபெற்ற இக்கூட்டத்தில், திருப்பீடத்தின் உயர்மட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களைக் குறித்த பரிந்துரைகள் தொகுக்கப்பட்டுள்ள ஒரு வரைவு ஏட்டினை, கர்தினால்கள் குழு, திருத்தந்தையுடன் இணைந்து ஆய்வு செய்தது என்று புரூனி அவர்கள் கூறினார்.
திருஅவையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், திருப்பீடத்தின் ஒரு சில அவைகளிலிருந்தும் புதிதாக வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை, இக்குழுவினர் தீவிரமாக ஆய்வு செய்தனர் என்று தெரியவந்துள்ளது.
திருப்பீடச் செயலர், கர்தினால் Pietro Parolin, மற்றும், கர்தினால்கள் Óscar Rodríguez Maradiaga, Reinhard Marx, Seán Patrick O'Malley, Giuseppe Bertello, Oswald Gracias ஆகிய ஆறு பேரும், திருத்தந்தையுடன் இணைந்து, இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் குழுவின் அடுத்த சந்திப்பு, இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்