போலந்து கர்தினால் Stefano Wyszyński அருளாளராக அறிவிக்கப்படுவார்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்
அருளாளர் மற்றும், புனிதர் நிலைகளுக்கு உயரத்துவதற்கென, மூன்று வணக்கத்துக்குரியவர்களின் பரிந்துரைகளால் இடம்பெற்ற புதுமைகள், இன்னும், இரண்டு மறைசாட்சிகள் மற்றும், மூன்று இறைஊழியர்களின் வீரத்துவப் புண்ணியங்கள் கொண்ட வாழ்வுமுறைகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இசைவு தெரிவித்துள்ளார்.
திருப்பீட புனிதர்நிலை பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், அக்டோபர் 2, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து, இந்த எட்டுப் பேர் குறித்த விவரங்களைச் சமர்ப்பித்தார்.
போலந்து நாட்டு வார்சா முன்னாள் பேராயர், கர்தினால் Stefano Wyszyński (ஆக.3,1901-மே 28,1981); இத்தாலியில் திருஇதய பொதுநிலையினர் சபையைத் துவங்கிய, இத்தாலிய அருள்பணி Francesco Mottola (சன.3,1901-ஜூன்29,1969); இத்தாலிய பொதுநிலையினரான Alessandra Sabattini (ஆக.19,1961-மே2,1984) ஆகிய மூன்று வணக்கத்துக்குரிய இறைஊழியர்களின் பரிந்துரைகளால் புதுமைகள் இடம்பெற்றுள்ளன.
இஸ்பெயினில், 1936ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதிக்கும் 12ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில், பொதுநிலையினரான Giovanni Roig y Diggle (மே 12,1917-செப்.12,1936) அவர்களும், பிரேசில் நாட்டில் 1941ம் ஆண்டில் பொதுநிலையினரான Benigna Cardoso da Silva (அக்.15,1928-அக்.24,1941) அவர்களும், மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர்.
மேலும், இத்தாலியின் பேராயர் Augusto Cesare Bertazzoni (சன.10,1876-ஆக.30,1972); பிரான்ஸ் நாட்டின் புனித Viatore மறைக்கல்வியாளர் சபையை ஆரம்பித்த அருள்பணி Giovanni Luigi Querbes (ஆக.21,1793-செப்.1,1859);இஸ்பெயின் நாட்டின் புனித கிளாரா ஆழ்நிலை தியான சபையின் Maria Francesca del Bambino Gesù (டிச.25,1905-பிப்.28,1991) ஆகிய மூன்று இறைஊழியர்களின் வீரத்துவப் புண்ணியங்களையும் திருத்தந்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்